காதலியை சுட்டு கொன்ற தெ. ஆப்பிரிக்க ஒலிம்பிக் வீரர் பிஸ்டோரியஸுக்கு 6 வருட சிறை
ஜோகனஸ்பர்க்: காதலியை கழிவறையில் வைத்து சரமாரியாக சுட்டு கொலை செய்த தென் ஆப்பிரிக்க மாற்றுத்திறனாளி, ஒலிம்பிக் தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு, ஆறு வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்புக்கு பெரும்பாலான தென் ஆப்பிரிக்க மக்கள் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர். அதிகமாக கொலை வழக்குகள் பதிவாகும், நாடுகளில் ஒன்றான தென் ஆப்பிரிக்காவில், முக்கிய கொலை வழக்கில் வழங்கப்பட்டுள்ள இதுபோன்ற மென்மையான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது தவறான செய்தியை அளித்துவிடும் என்று, சோஷியல் மீடியாக்களில் மக்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

2013ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், பிஸ்டோரியஸ் (29), தனது காதலி ரீவா ஸ்டீன்கம்ப்பை சுட்டு கொலை செய்தார். கழிவறைக்கு உள்ளே இருந்த ரீவா ஸ்டீன்கம்ப்பை கதவு வழியாக துப்பாக்கியால் 4 ரவுண்டுகள் சுட்டு கொலை செய்தார் பிஸ்டோரியஸ்.
இக்கொலையை செய்தது தான்தான் என்று பிஸ்டோரியஸ் ஒப்புக்கொண்ட நிலையில், கழிவறைக்குள் திருடன் நுழைந்துவிட்டதாக அஞ்சி தெரியாமல் சுட்டுவிட்டதாக பிஸ்டோரியஸ் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்த வழக்கில் முதலில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவருடமாக சிறையில் இருந்த அவர் பரோலில் வெளியே வந்து தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்கக் கோரி தென் ஆப்பிரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது திட்டமிட்ட கொலை என்று கூறியதுடன், இதுபற்றி விசாரித்து பிஸ்டோரியசுக்கு தண்டனையை உயர்த்தி வழங்கும்படி கீழ்கோர்ட்டுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து அரசியல் சாசன அமர்வில் முறையிட அவரது வழக்கறிஞர்கள் முயன்றனர். ஆனால், வழக்கை விசாரிக்க அரசியல் சாசன அமர்வு மறுத்துவிட்டது.
இதையடுத்து கீழ்கோர்ட்டில் பிஸ்டோரியசுக்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பான வாதம் ஜூன் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தது.
அப்போது, பிஸ்டோரியஸ் தரப்பு சாட்சியாக வாக்குமூலம் அளித்த உளவியல் நிபுணர் ஜோனாதன். மேற்படி சம்பவம் நடந்த பின்னர் பிஸ்டோரியசின் மனநிலை பாதிக்கப்பட்டதாகவும், அது கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமடைந்தது கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும், சிறையில் இருந்தால் அவரது நிலைமை மேலும் மோசமாகிவிடும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கில் பிஸ்டோரியசின் தண்டனைக் காலத்தை முடிவுசெய்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கொலைவழக்கை ஆரம்பத்தில் விசாரித்த நீதிபதி தொகோஸிலே மஸிப்பா இந்த தீர்ப்பை வெளியிட்டார்.
தீர்ப்பை கேட்டதும், கோர்ட்டுக்கு வந்திருந்த தனது சகோதரியை கட்டியணைத்து, உணர்ச்சிமிகுந்தவராக காணப்பட்டார் பிஸ்டோரியஸ்.












Click it and Unblock the Notifications