ஒபாமவைக் கொல்ல சதியா? – வெள்ளை மாளிகைக்கு வந்த சயனைடு கடிதத்தால் பரபரப்பு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவை கொலை செய்வதற்காக தபாலில் சயனைடு பாக்கெட் ஒன்று வெள்ளை மாளிகைக்கு வந்தது பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகையின் ரகசியத்துறை பிரிவினரும், அமெரிக்க புலனாய்வுத்துறையினரும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வெள்ளை மாளிகை ரகசியத்துறை செய்தி தொடர்பாளர் பிரையன் லியரி கூறுகையில், " மார்ச் 16 ஆம் தேதி வெள்ளை மாளிகைக்கு வந்த தபாலை முதல் கட்டமாக சோதனை செய்த போது அதில் ஆபத்தான பொருள் ஏதும் இல்லை என தெரியவந்தது.
சந்தேகம் தொடர்ந்ததால் அந்த தபாலை மீண்டும் நேற்று வேதியல் சோதனைக்கு உட்படுத்தியபோது அதில் சயனைடு இருப்பது தெரிய வந்தது எனக்கூறினார்.
1995 ஆம் ஆண்டு முதல் இதுபோன்று தபால்களை அனுப்பிய நபர்தான் இம்முறையும் அனுப்பியுள்ளார் எனத்தெரிய வந்துள்ளது. 1995 ஆம் ஆண்டு இதே போன்று வெள்ளை மாளிகைக்கு மனிதக்கழிவுகளை பாக்கெட்டில் வைத்து அனுப்பப்பட்டது.
விசாரணையில் மனித கழிவுகளை அனுப்பியவரின் அதே முகவரியில் இருந்து தான் தற்போது சயனைடும் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
2012 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி காலி மதுபான பாட்டில்களை அந்த நபர் அனுப்பியதாகவும் வெள்ளை மாளிகை இணையதள தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்முறை அந்த நபர்மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.