அடப்பாவமே!சர்வதேச நாடுகள் அளித்த பரிசுகளை பிளாக் மார்க்கெட்டில் விற்ற பாக். பிரதமர்.. காரணம் இதுதான்
இஸ்லாமாபாத்: விலை உயர்ந்த வாட்ச் உட்பட வெளிநாடுகளிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு பரிசுகளையும் பாக். பிரதமர் இம்ரான் கான், முறைகேடாக வெளிச்சந்தையில் விற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பொதுவாக ஒரு நாட்டின பிரதமரோ அல்லது அதிபரோ மற்ற நாடுகளுக்குப் பயணம் செய்யும் போது, அவர்களுக்கு அன்பளிப்பாக சில பரிசுகள் வழங்கப்படும். அரசு பதவியில் இருக்கும் போது பெறும் பரிசுகள் என்பதால், இவை அனைத்தும் அரசுக் கருவூலத்திற்குச் செல்லும்.
பெரும்பாலும், இந்த பரிசுகள் எப்போதும் அரசின் கருவூலத்திலேயே இருக்கும். அரசு முடிவு எடுக்கும்போது மட்டுமே இவை பொதுமக்களிடம் ஏலத்தில் விடப்படும். சமீபத்தில் கூட பிரதமர் மோடிக்கு வந்த பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளிநாடுகளில் இருந்து தனக்குக் கிடைத்த பரிசுகளை முறைகேடாக விற்றுள்ளதாக அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அந்நாட்டின் சட்டப்படி பரிசுகள் ஏலத்தில் விற்கப்படாவிட்டால் அரசின் சொத்தாக இருக்கும். ரூ.10,000க்கும் குறைவான பரிசுகள் என்றால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது தலைவர்கள் அவற்றை வைத்துக் கொள்ளலாம் என்று பாகிஸ்தானில் விதி உள்ளது. இருப்பினும் பல விலை மதிப்பிலான பரிசுகளை அவர் விற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வெளிச்சந்தையில் விற்பனை
குறிப்பாக சுமார் ஒரு மில்லியன் டாலர் மதிப்பிலான வாட்ச் ஒன்றையும் பிரதமர் இம்ரான் கான் வெளிச் சந்தையில் விற்றுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒரு வளைகுடா நாட்டிற்குச் சென்றபோது அந்நாட்டின் இளவரசர் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள வாட்சை இம்ரான் கானுக்கு பரிசாக வழங்கியுள்ளார். அந்த வாட்ச் இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளரால் துபாயில் விற்கப்பட்டதாகவும், பிரதமருக்கு $ 1 மில்லியன் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது வெட்கக்கேடானது
இது வெட்கக்கேடானது என்று விமர்சித்துள்ள அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் மவுலானா ஃபஸ்லூர் ரஹ்மான், பாகிஸ்தான் கவுரவத்தை சர்வதேச அரங்கில் கெடுக்கும் வகையில் பிரதமர் நடந்து கொண்டுள்ளார் என்றும் விமர்சித்துள்ளார். அவர் மட்டுமின்றி பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்களும் இம்ரான் கானை இந்த விஷயத்தில் கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும், வெளிநாட்டுத் தலைவர்களிடம் இருந்து பாக். பிரதமர் இம்ரான் கான் பெற்ற பரிசுகள் குறித்த தகவல்களைப் பொதுவெளியில் அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

அரசு விளக்கம்
இருப்பினும், இந்த தகவல்கள் ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ள பாக். பிரதமர் இம்ரான் கானின் அரசியல் செய்தித்தொடர்பாளர் டாக்டர் ஷாபாஸ் கில்,"பொதுவாகப் பிரதமர் இம்ரான் கான் தனக்கு வரும் அனைத்து பரிசுகளையும் கருவூலத்திற்கு அனுப்பிவிடுவார். அதேநேரம், சில பரிசுகளை வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் நினைத்தால், அதற்காகத் தொகையை அவர் செலுத்தி விடுவார்" என்று தெரிவித்தார்.

பாக். மறுப்பு
பரிசுகள் குறித்த தகவல்களைப் பொதுவெளியில் தெரிவிக்க முடியாது என்று பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனைப் பொதுவெளியில் அறிவித்தால், இது பிற நாடுகள் உடனான உறவைப் பாதிக்கும் என்பதால் வெளியிட முடியாது என்று மறுத்துள்ளது. இது தொடர்பாக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் இதை ரகசிய ஆவணம் என்பதால் வெளியிட முடியாது என்றே பாகிஸ்தான் அரசு குறிப்பிட்டது.












Click it and Unblock the Notifications