இரவோடு இரவாக வெடித்த போர்.. பாகிஸ்தான் மீது ஆப்கான் அதிரடி தாக்குதல்.. 55 வீரர்கள் பலி, பலர் கைது!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் மோதல் வெடித்துள்ளது. இரவோடு இரவாக பாகிஸ்தான் மீது திடீரென ஆப்கானிஸ்தான் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஆப்கன் தாலிபான் படைகள் நடத்திய தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எல்லையில் மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில காலமாகவே பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் மோதல் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் உயிரிழப்புகளும் கூட தொடர்கதையாகி வருகிறது. இதற்கிடையே இரு நாடுகளுக்கும் இடையே திடீரென எல்லையில் மோதல் வெடித்துள்ளது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.

இரவோடு இரவாக தாக்குதல்
பாகிஸ்தான் மீது இரவோடு இரவாக ஆப்கானிஸ்தான் தாலிபான் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.. இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் விரிவான செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ஆப்கான் பிரதேசத்தில் அத்துமீறிக் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் அதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை ஆப்கன் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பிப்ரவரி 26ம் தேதி இரவு 8:00 மணிக்கு இந்த பதிலடி தாக்குதல் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றிய ஆப்கன்
ஆப்கான் படைகள் துரந்த் கோடு நெடுகிலும் உள்ள பக்ஷிகா, பக்ஷியா, கோஸ்ட், நங்கர்ஹார், குனார் மற்றும் நூரிஸ்தான் மாகாணங்களுக்கு அருகிலுள்ள கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் ஒருங்கிணைந்த எதிர்த் தாக்குதல்களை நடத்தின. இந்த நான்கு மணி நேர சண்டையின் போது, இரண்டு பாகிஸ்தான் ராணுவத் தளங்கள் மற்றும் 19 ராணுவ முகாம்களை கைப்பற்றப்பட்டதாக ஆப்கன் அமைச்சகம் கூறியது. மேலும் நான்கு கூடுதல் ஸ்டேஷன்களில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் தப்பியோடியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மொத்தம் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றும் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் ஆப்கானிஸ்தானுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், பல வீரர்கள் உயிருடன் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இலகுரக மற்றும் கனரக ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் ராணுவப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பதிலடி
இதைத் தொடர்ந்து பாகிஸ்தானும் பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளது.. தாலிபானிடம் இருந்து இந்த அறிக்கை வந்த சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியுள்ளது. ஆப்கான் தலைநகர் காபூலில் அதிகாலையில் வெடிச்சத்தங்களும், போர் விமானங்களின் சத்தமும் கேட்டன.
காபூல், கந்தஹார் மற்றும் பக்ஷியா ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல்கள் நடத்தியதாகத் தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் குற்றம் சாட்டினார். பாகிஸ்தானின் கோழைத்தனமான ராணுவம் காபூல், கந்தஹார் மற்றும் பக்ஷியாவின் சில பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது என்றும் அதிர்ஷ்டவசமாக, எந்தவித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று முஜாஹித் தெரிவித்தார்.
பதற்றம்
இப்படி இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொள்வதால், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், இதனால் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது முழு வீச்சில் ஒரு போராட வெடித்தால் பாதிப்புகள் மகி மோசமாக இருக்கும் என்ற அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications