போர் தொடுத்தால் தாங்க முடியாத வலியைக் கொடுப்போம்.. இந்தியாவுக்கு பாக். ராணுவ தளபதி மிரட்டல்
ராவல்பிண்டி: காஷ்மீர் பிரச்சினை இன்னும் முடியவில்லை. அது முடியாதவரை இந்திய, பாகிஸ்தான் பிரிவினையும் முற்றுப் பெறாது. எங்கள் மீது இந்தியா குறுகிய காலமோ அல்லது நீண்ட காலமோ, எப்படிப் போர் தொடுத்தாலும், அந்த நாட்டுக்குத் தாங்க முடியாத வலியை பாகிஸ்தான் ராணுவம் கொடுக்கும் என்று அந்த நாட்டு ராணுவத் தளபதி ரஹீல் ஷரீப் மிரட்டல் விடுத்துள்ளார்.
ராவல்பிண்டியில் அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், எங்களது படையினர் எப்போதும் தயார் நிலையிலேயே உள்ளனர். வெளியிலிருந்து எந்த வகையான தாக்குதல் தொடுக்கப்பட்டாலும் அதைத் தகர்க்கும் வகையில் படையினர் எப்போதும் முழு ஆயத்த நிலையிலேயே உள்ளனர்.

எங்களைத் தவறாக மதிப்பிட்டு, எதிரி எங்களைத் தாக்கத் துணிந்தால், அந்த நாட்டுக்கு தாங்க முடியாத அளவுக்கு செலவீனத்தையும், வலியையும், துயரத்தையும் பாகிஸ்தான் ராணுவம் அளிக்கும்.
காஷ்மீரில் அப்பாவி மக்கள் தாங்க முடியாத துயரங்களையும், சித்திரவதைகளையும், கொடுமைகளையும், அநீதியையும் சந்தித்து வருகின்றனர். காஷ்மீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் எந்த அமைதியையும் இங்கு ஏற்படுத்த முடியாது. காஷ்மீர் வி்வகாரத்தை நீண்ட நாளைக்கு கிடப்பில் போட்டு வைத்திருக்கவும் முடியாது.
நேரம் வந்து விட்டது. ஐ.நா தீர்மானத்தின் அடிப்படையில் காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றார் ஷரீப்.
1965ல் இந்தியாவுடன் நடந்த போரின்போது சரியான அடி வாங்கி பின்வாங்கிய நாளை பாகிஸ்தான் பாதுகாப்பு தினமாக கொண்டாடுகிறது. அதையொட்டி நடந்த நிகழ்ச்சியில்தான் இப்படி சவடாலாக பேசியுள்ளார் ஷரீப்.
கடந்த வாரம் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக், பாகிஸ்தானுடன் குறுகிய கால போருக்கு இந்திய ராணுவம் தயாராகிறது என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். இதை மனதில் வைத்தே இப்படி மிரட்டியுள்ளார் ஷரீப்.












Click it and Unblock the Notifications