இப்போ இப்படி ஆரம்பிச்சிட்டாங்க.. இஸ்லாமை இழுத்த பாகிஸ்தான் ராணுவம்.. ராமாயணத்தை சொல்லி இந்தியா பதில்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் தனது பயிற்சி மற்றும் நடவடிக்கைகளில் இஸ்லாமிய கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், 'இமான், தக்வா, ஜிஹாத் ஃபீ சபீலில்லாஹ்' (நம்பிக்கை, பக்தி, கடவுளின் பாதையில் போராடுதல்) என்ற நோக்கத்தைக் கொண்டிருப்பதாகவும் அந்நாட்டின் ராணுவ செய்தித் தொடர்பாளர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் ராம புராணத்திலிருந்து ஒரு மேற்கோளைக் கூறி, இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அஹ்மத் ஷெரீஃப், சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில், பாகிஸ்தான் ராணுவத்தின் செயல்பாடுகள் இஸ்லாமிய வழிகாட்டுதலின்படி அமைந்திருக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர், இஸ்லாம் தனிப்பட்ட வீரர்களின் நம்பிக்கை மட்டுமல்ல என்றும், அது ராணுவப் பயிற்சியின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் தெரிவித்தார்.

'புன்யானும் மர்சூஸ்' (Bunyanum Marsoos) என்ற தங்கள் நடவடிக்கைக்கு பெயரிட்டது குறித்துக் கூறுகையில், அல்லாஹ்வுக்காகப் போராடுபவர்கள் 'எஃகு சுவர்' போன்றவர்கள் என்று குறிப்பிட்டார். லெப்டினன்ட் ஜெனரல் அஹ்மத் ஷெரீஃபின் தந்தை மஹ்மூத் சுல்தான் பஷீருதீன், பாகிஸ்தான் அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் விஞ்ஞானி மற்றும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டவர் என்ற பின்னணியும் செய்திகளில் அடிபடுகின்றன.
இதற்கு மாறாக, டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, பாகிஸ்தானின் எந்தவிதமான அத்துமீறலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்பதை வலியுறுத்தினார். இலங்கை செல்வதற்கு அனுமதி கேட்டு சமுத்திரத்திடம் மூன்று நாட்கள் பொறுமையாகக் காத்திருந்த ராமபிரான் பின்னர் கோபமடைந்த நிகழ்வைக் குறிக்கும் ராம சரித்திரத்தின் ஒரு மேற்கோளை அவர் பயன்படுத்தினார்.
"விநய ந மானத் ஜலதி ஜட், பயே தீன் தின் பீத். போலே ராம் சாகோப் தப், பய பினு ஹோய் ந ப்ரீதி" என்ற அந்த மேற்கோளின் அர்த்தம், "மூன்று நாட்கள் கெஞ்சியும் முட்டாள் கடல் பணியவில்லை. அப்போது ராமர் கோபத்துடன், பயம் இல்லையென்றால் அன்பும் இல்லை என்றார்" என்பதாகும். இதன் மூலம், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதையும், அச்சுறுத்தல் இன்றி உண்மையான உறவு இருக்க முடியாது என்பதையும் அவர் சூசகமாகத் தெரிவித்தார். புரிந்துகொள்ளக்கூடியவர்களுக்கு இதுவே ஒரு குறிப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
இப்போது மதரீதியாக இரு நாட்டு ராணுவ முக்கிய பிரமுகர்களும் வார்த்தை மோதலில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications