"ஐயோ முடியல!" காலியாகும் அணைகளால் திணறும் ஷெரீப் அரசு! சிந்து நதி இல்லைனா பாகிஸ்தானுக்கு பேரழிவுதான்
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகியுள்ள நிலையில், பாகிஸ்தானில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இந்த வலியை உணர தொடங்கியுள்ள பாகிஸ்தான் இப்போது என்ன செய்வது என்றே தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறது.
பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கையை எடுத்தது. அதன் ஒரு பகுதியாகச் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்தும் இந்தியா விலகியது..

சிந்து நதி நீர் ஒப்பந்தம்
இவ்வளவு காலம் இந்த ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்குத் தண்ணீரை இந்தியா திறந்துவிட வேண்டியது கட்டாயமாக இருந்தது. ஆனால், இப்போது இந்தியா தனது தேவைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கலாம். இந்தியாவின் இந்த நடவடிக்கையை எதிர்பார்க்காத பாகிஸ்தான் இப்போது திணறி வருகிறது. சிந்து நதியில் கடுமையான நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் வலியை உணர ஆரம்பித்துவிட்டது. அங்கு நீர்ப் பற்றாக்குறை காரணமாக கரீஃப் (கோடைக் காலப் பயிர்கள்) சாகுபடி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகளை உள்ளடக்கிய சிந்து நதி அமைப்பில் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. குறிப்பாகச் சிந்து நதி அமைப்பில் உள்ள தார்பெலா அணை மற்றும் ஜீலம் நதியில் உள்ள மங்லா அணை ஆகிய இரு முக்கிய அணைகளிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. செனாப் நதியில் நீர் விநியோகத்தை இந்தியா ஏற்கனவே நிறுத்துவிட்டதால் நிலைமை மோசமாகிவிட்டதாகப் பாகிஸ்தான் கூறியுள்ளது.
குறையும் தண்ணீர்!
இரு நாட்களுக்கு முன்பு, அதாவது ஜூன் 2ம் தேதி வெளியான டேட்டாவின்படி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சிந்து நதியில் நீரின் அளவு 10.3 சதவீதம் குறைந்துள்ளது. பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழை ஆரம்பிக்கவே இன்னும் நான்கு வாரங்கள் இருப்பதால் நிலைமை மோசமாகும் என அஞ்சப்படுகிறது.
கரீஃப் சாகுபடி பருவம் ஏற்கனவே தொடங்கிவிட்ட போதிலும், தென்மேற்கு பருவமழை அடுத்த மாத தொடக்கத்தில் தான் பஞ்சாப் மாகாணத்தை அடையும். பாகிஸ்தானில் கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால், நீர் பிரச்சனைகள் அதிகரிக்கவே செய்யும் என்று கூறப்படுகிறது. விவசாயிகளுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
தடுமாறும் ஷெரீப் அரசு
கடந்த மாதம் தான் சிந்து நதி அமைப்பில் எந்தளவுக்கு நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் என்ற கணிப்பு ஒன்றை அந்நாட்டு அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி, அங்கு ஒட்டுமொத்தமாக 21 சதவீதம் வரை நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. மேலும், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களுக்கு நீர்ப் பாசனத்திற்குப் பயன்படும் முக்கிய அணைகளின் நீர் மட்டமும் 50%க்கு கீழ் போகலாம் என்றும் பாகிஸ்தான் அரசு எச்சரித்துள்ளது.
இந்த நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாகவே, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடந்த வாரம் தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் நடைபெற்ற பனிப்பாறை பாதுகாப்பு மாநாட்டில் இது குறித்துப் பேசியிருந்தார். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்திருப்பது குறித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க முயன்றார்.
இந்தியாவின் நிலைப்பாடு
ஆனால், இந்தியா இந்த விவகாரத்தில் தெளிவாக இருக்கிறது. ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாயவே முடியாது என்பதை இந்தியா திட்டவட்டமாகவே கூறி வருகிறது. சிந்து நதி நீரைப் பாகிஸ்தானுக்குக் கொடுப்பதில் இந்தியாவுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. ஆனால், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் ஒரே கண்டிஷனாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications