சீன ஜெட்களை வைத்து சொந்த மக்களையே கொடூரமாக கொன்ற பாகிஸ்தான்.. LS-6 மூலம் இரவோடு இரவாக பேரழிவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் தனது சொந்த நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தவறான உளவுத் தகவல்களே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே சீன ஜெட்களை வைத்து பாகிஸ்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது அண்டை நாடான பாகிஸ்தான் பல காலமாகவே தீவிரவாதத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்திருக்கிறது. இந்தத் தீவிரவாதம் ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அரசின் கையை மீறியும் சென்றுவிடும். இதனால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தங்கள் சொந்த நாட்டு மக்கள் மீதே தாக்குதல் நடத்துவார்கள். இதனால் உயிரிழப்புகளும் ஏற்படும்.

அப்பாவி மக்கள் உயிரிழப்பு
ஆனால், இப்போது நிலைமை அதையும் தாண்டிப் போய்விட்டது. பாகிஸ்தான் ராணுவமே அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. பாகிஸ்தானில் வடமேற்குப் பகுதியில் கைபர் பக்துன்வா மாகாணத்தில் அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறது. தீவிரவாதிகள் இருக்கும் இடம் எனக் கருதி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெஹ்ரீக்-இ-தாலிபான் என்ற பயங்கரவாதக் குழுவின் குண்டு தயாரிக்கும் மையத்தைக் குறிவைத்தே பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியுள்ளது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பயங்கரவாதிகள் மறைந்து கொண்டிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்ததாகவும், அதன் அடிப்படையிலேயே தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்களே கொல்லப்பட்டுள்ளனர்.
சீன ஜெட்கள்
இதில் நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.. அதாவது சீனாவின் JF-17 ஜெட் விமானங்கள் மூலமாகவே பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த JF-17 ஜெட்களை இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களிலும் பாகிஸ்தான் பயன்படுத்தியது. இந்த ஜெட் மூலம் LS-6 ஆயுதத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியுள்ளது. LS-6 என்பது சாட்டிலைட் அடிப்படையில் இயங்கும் ஒரு ஏவுகணை அமைப்பாகும். நீண்ட தூர இலக்கு என்றாலும் துல்லியமாகச் சென்று தாக்கும் திறன் கொண்டது.
எல்லாமே சொதப்பல்
சரியாக எங்குச் சென்று தாக்க வேண்டும் என ப்ரோகிராம் செய்கிறோமோ.. அதே இடத்திற்குச் சென்று இது தாக்கும். அப்படியிருந்தும் அப்பாவி பொதுமக்கள் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளது என்றால் பாகிஸ்தானுக்குக் கிடைத்த உளவுத் தகவல் முழுமையாகத் தவறு என்பதே இதன் மூலம் தெரிகிறது. முழுக்க முழுக்க தவறான உளவுத் தகவல்களை வைத்து நள்ளிரவு நேரத்தில் தாக்குதல் நடத்தி இப்போது சர்வதேச அரங்கில் அவமானப்பட்டு நிற்கிறது பாகிஸ்தான்!
தெஹ்ரீக்-இ-தாலிபான்
தெஹ்ரீக்-இ-தாலிபான் என்ற தீவிரவாத அமைப்பைக் குறிவைத்தே பாகிஸ்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இவர்கள் ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒரு தீவிரவாத அமைப்பாகும். தெஹ்ரீக்-இ-தாலிபான் அமைப்புக்கு ஆப்கன் தாலிபான் அரசு உதவி செய்து வருவதாகவும் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஆப்கன் நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், தங்களுக்கும் இந்த அமைப்புக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றே ஆப்கன் அரசு தொடர்ந்து சொல்லி வருகிறது.
இந்தியா மீது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் பல ஆண்டுகளாகவே ஆதரித்து வருகிறது. இது உலகத்திற்கே தெரியும். இப்போது அதே எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் பாகிஸ்தான் அவதிப்பட ஆரம்பித்துள்ளது. தெஹ்ரீக்-இ-தாலிபான் தீவிரவாதிகளை அழிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறியே வருகிறது.












Click it and Unblock the Notifications