பாகிஸ்தானில் 15 வயது சிறுவனை கையை வெட்டத் தூண்டிய இமாம் கைது
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 15 வயது சிறுவன் தனது கையை வெட்டக் காரணமாக இருந்த இமாம் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநகரான ஒகாராவைச் சேர்ந்தவர் ஷப்பிர் அகமது. அப்பகுதி பள்ளிவாசலில் இமாமாக உள்ளார். அவர் பள்ளிவாசலில் தொழுக வந்த ஆண்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் உங்களில் யார் தொழுவதை நிறுத்திவிட்டீர்கள் என்று கேட்டுள்ளார்.
அவர் கேட்ட கேள்வியை சரியாக கவனிக்காமல் 15 வயது சிறுவன் ஒருவர் கையை தூக்கினார். உடனே அங்கிருந்தவர்கள் எல்லாம் சிறுவனை பார்த்து கடவுளை அவமதித்துவிட்டாய் என்று கூறினார்கள்.
இந்நிலையில் இமாம் ஷப்பிர் அகமதோ சிறுவனை பார்த்து, நீ கடவுளை அவமதித்துவிட்டாய், நீ கொலை செய்யப்பட வேண்டியவன் என்றார். இதை எல்லாம் கேட்ட சிறுவன் வெட்கி தலை குனிந்தார்.
நேராக வீட்டிற்கு சென்ற சிறுவன் பாவ மன்னிப்பு தேட தவறாக தூக்கிய கையை வெட்டி ஒரு தட்டில் வைத்து பள்ளிவாசலுக்கு கொண்டு வந்து இமாமிடம் அளித்தார்.
சிறுவனின் செயலை உள்ளூர் மக்கள் பாராட்டினர். அவரின் பெற்றோருக்கோ சிறுவன் செய்த செயலால் ஒரே பெருமையாகிவிட்டது.
இந்நிலையில் ஒகாரா போலீசார் ஷப்பிர் அகமதை தீவிரவாத தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.