பாகிஸ்தானில் காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் வரை.. இம்ரான் கான்தான் பிரதமராக நீடிப்பார் - ஜனாதிபதி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார் என்று அந்நாட்டு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் வரை இம்ரான் கான் பிரதமராக நீடிப்பார்.
பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று நடக்க இருந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பை துணை சபாநாயகர் குவாஸிம் கான் சுரி நிராகரித்தார்.
பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்ட விதி 5க்கு எதிரானது தீர்மானம் இது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி அதை துணை சபாநாயகர் நிராகரித்தார்.

துணை சபாநாயகர்
அதோடு இந்த தீர்மானத்தில் வெளிநாட்டு சதி இருப்பதால் அதை நிராகரிப்பதாகவும் துணை சபாநாயகர் தெரிவித்தார். இதையடுத்து பாகிஸ்தானில் புதிதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த இம்ரான் கான் பரிந்துரை செய்தார். தேர்தலை புதிதாக நடத்துங்கள். அமைச்சரவையை கலையுங்கள் என்று இம்ரான் கான் அந்நாட்டு ஜனாதிபதி ஆரிப் ஆல்விக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஜனாதிபதி ஏற்றார்.

பாகிஸ்தான்
இதையடுத்து பாகிஸ்தான் அமைச்சரவை மொத்தமாக கலைக்கப்பட்டது. 90 நாட்களில் அங்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இம்ரான் கான் பிரதமராக இருப்பார் என்றும் தகவல்கள் வந்தன. பாகிஸ்தான் மக்களே புதிய அரசை தேர்வு செய்ய வேண்டும். தங்களை யார் நிர்வகிக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானம் செய்ய வேண்டும் என்று இம்ரான் கான் முன்பு குறிப்பிட்டு இருந்தார்.

அமைச்சரவை கலைப்பு
பாகிஸ்தானில் தேர்தல் நடக்கும் வரை இம்ரான் கான்தான் பிரதமர் என்று கருதப்பட்ட நிலையில், இம்ரான் கான் பிரதமர் இல்லை என்று பாகிஸ்தான் அமைச்சரவை செயலாளர் நேற்று இரவு திடீரென அறிவித்தார். அமைச்சரவை மொத்தமாக கலைக்கப்பட்டுவிட்டது. அதனால் இம்ரான் கானும் தானாக பதவியை இழக்கிறார். அமைச்சரவை இல்லாத காரணத்தால் அவரும் பிரதமராக நீடிக்க முடியாது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் இம்ரான் கான்
இந்த நிலையில்தான் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார் என்று அந்நாட்டு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் வரை இம்ரான் கான் பிரதமராக நீடிப்பார். இம்ரான் கான் பிரதமர் இல்லை என்று பாகிஸ்தான் அமைச்சரவை செயலாளர் அறிவித்த நிலையில் ஜனாதிபதி புது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் பாகிஸ்தானில் புதிதாக காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் வரை இம்ரான் கான் பிரதமராக இருப்பார்.

நீதிமன்றம்
அங்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றம் சென்றனர். ஆனால் அதற்கு முன்பாக உச்ச நீதிமன்றம் இதை தாமாக விசாரிக்க முன் வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடியும் வரை அனைத்து தரப்பும் அமைதி காக்க வேண்டும். ஜனநாயக ரீதியாக, பாதுகாப்பு ரீதியாக எந்த பிரச்சனையும் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மூன்று நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டது. உச்ச நீதிமன்றத்தில் இன்று இது தொடர்பான வழக்குகள் விசாரணை செய்யப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications