"பாகிஸ்தான் ஒரு தோல்வி அடைந்த நாடு.." ஆவேசமாக விமர்சித்த பிரிட்டன் எம்பி.. இந்தியாவுக்கு முழு ஆதரவு!
லண்டன்: பாகிஸ்தானின் தேவையற்ற நடவடிக்கைகளால் கடந்த மாதம் இந்தியாவுடன் மோதல் ஏற்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குச் சர்வதேச அளவிலும் விமர்சனங்கள் எழுந்திருந்தது. இதற்கிடையே பாகிஸ்தானைத் தோல்வியடைந்த நாடு என்று கடுமையாக விமர்சித்துள்ள பிரிட்டன் எம்.பி. பாப் பிளாக்மேன், பாகிஸ்தான் அரசின் ராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், அங்கு பவர் யாரிடம் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதும் அதை முறியடித்து இந்தியா திரும்பத் தாக்க ஆரம்பித்தவுடன் பாகிஸ்தான் சரணடைந்துவிட்டது அனைவருக்கும் தெரியும். இந்தியாவின் நிலைப்பாட்டையும் தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்க எம்பிக்கள் குழு உலக நாடுகளுக்குச் சென்றுள்ளன.

பிரிட்டன் எம்பி ஆவேசம்
அதன்படி பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு லண்டன் சென்றுள்ளது. அங்குள்ள அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் அழைத்து விளக்கம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பாப் பிளாக்மேன், இந்தியாவின் மீது பயங்கரவாதத்தை ஊக்குவித்ததற்காகவும், காஷ்மீரைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததற்காகவும் பாகிஸ்தானைக் விமர்சித்தார். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு உலக நாடுகள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தோல்வி அடைந்த நாடு
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்றும் பிராந்திய அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது என்றும் அவர் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், "பாகிஸ்தான் ஒரு தோல்வி அடைந்த நாடு.. பாகிஸ்தானில் ஜனநாயகம் இல்லை.. பாகிஸ்தான் ராணுவத்தின் கீழ் மக்கள் துன்பப்படுகிறார்கள்.. அங்கு உண்மையில் யாரிடம் பவர் இருக்கிறது.. ஜனநாயக அரசிடமா அல்லது ஜெனரல்களிடமா? பாகிஸ்தானில் இருந்துதான் இந்தியாவிற்குள் பயங்கரவாதம் ஊடுருவுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்தியாவின் ஒரு பகுதியான ஜம்மு காஷ்மீரைச் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதைப் பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். அங்குள்ள பாக். ராணுவம் வெளியேற வேண்டும்.. 1947ல் இருந்தது போல ஜம்மு காஷ்மீரை ஒன்றாக இணைக்க வேண்டும். அதன் பிறகு மட்டுமே பயங்கரவாதத்தை ஒழித்து, அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
நிதியைத் தவறாகப் பயன்படுத்தும் பாகிஸ்தான்
பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் சர்வதேச நிதியை அவர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அதை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படாமல், இந்தியாவிற்கு எதிராகப் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகச் சீனாவிடம் ஆயுதங்கள் வாங்கப் பயன்படுத்துகிறார்கள். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் இந்தியாவின் முயற்சிக்குப் பிரிட்டன் ஆதரவளிக்கும்... இந்தியா அமைதியை விரும்புகிறது.. தீவிரவாதத்தை ஆதரிப்பதற்குப் பதிலாகப் பாகிஸ்தான் போலியோ போன்ற நோய்களை ஒழிக்கச் சர்வதேச நிதியைப் பயன்படுத்த வேண்டும். ராணுவ நடவடிக்கைகளுக்காகச் சர்வதேச நிதி பயன்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.
பிரிட்டன் எம்பிக்கள்
முன்னதாக நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் பிரிட்டன் நாட்டின் முக்கிய எம்பிக்கள் அனைவரும் பங்கேற்றனர். மேலும், பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவதிலும், பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதிலும் இந்தியாவுக்குப் பிரிட்டன் ஆதரவளிக்கும் என்று பிரிட்டன் எம்.பி.க்கள் உறுதியளித்தனர்.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் ஏற்பட்ட மோதலுக்கு பஹல்காம் தாக்குதலே தொடக்கப் புள்ளியாக இருந்தது. காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் இயற்கை அழகை ரசிக்கச் சென்ற அப்பாவி பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications