"நான் ஒரு துரதிர்ஷ்டமான தந்தை".. காஷ்மீரில் பிடிபட்ட பாக். தீவிரவாதி முகமது நவீத்தின் தந்தை கதறல்
இஸ்லாமாபாத் : தான் ஒரு துரதிர்ஷ்மான தந்தை என்று காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதியின் தந்தை பாகிஸ்தானில் இருந்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உள்பட 2 பேர் உயிரிழந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதியை, சிறை பிடிக்கப்பட்ட கிராம மக்களே தைரியமாகப் பிடித்து ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட தீவிரவாதி முகமது நவீத் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த ஊடகம் ஒன்று, கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி முகமது நவீத்தின் தந்தை என கருதப்படும் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசியுள்ளது. அப்போது யாகூப் என்ற அந்த நபர்...
"நான் ஒரு துரதிஷ்டவசமான தந்தை. அவன் உயிருடன் பிடிப்பட்டதை லஷ்கர்-இ-தொய்பா இயக்கம் விரும்பவில்லை. எனவே அவர்கள் எங்கள் குடும்பத்தினரை கொல்ல போகிறார்கள். தயவு செய்து அவனை(நவீத்) ஒன்று செய்துவிடாதீர்கள்" என அவர் கூறிவிட்டு தெலைபேசியை வைத்துவிட்டார்.
மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது போன் அனணத்து வைக்கப்பட்டிருந்தது.
பிடிபட்ட தீவிரவாதி பாகிஸ்தானைச் சேர்ந்தவன் இல்லை என்று அந்நாடு மறுத்துள்ள நிலையில், தீவிரவாதியின் தந்தை பாகிஸ்தானில் இருந்து பேசியது பாகிஸ்தான் நிலைப்பாட்டில் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.