பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர் ரத்தானதற்கு.. அமெரிக்காதான் காரணம்.. பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு
இஸ்லாமாபாத்: நியூசிலாந்து, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானில் தொடர்களை ரத்து செய்தது அமெரிக்காதான் காரணம் என்று பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சவுத்ரி குற்றம்சாட்டினார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள், 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருந்தது. ராவல்பிண்டி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஒரு நாள் போட்டி தொடங்குவதற்கு தயாராக இருந்தது.
ஆனால் அந்த போட்டியில் டாஸ் போடுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு இந்த தொடரிலிருந்து விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் திடீரென அறிவித்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர் ரத்து
போட்டி தொடங்குவதற்கு முன்பு, மைதானத்தில் குண்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் வீரர்கள் அனைவரும் ஹோட்டல் ரூம்களிலேயே தங்க வைக்கப்பட்டனர். ரசிகர்களும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. அதன்பின்பு குண்டு வைத்திருப்பது தொடர்பான தகவல் போலியான செய்தி என்பதும் போட்டியை நடத்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் ''எங்கள் நாட்டின் உளவுத்துறை பாதுகாப்பு அச்சறுத்தல் இருக்கிறது என்று அலர்ட் கொடுக்கிறது'' என்று பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தொடரில் இருந்து முழுமையாக விலகி விட்டது.

அரசியல் காரணம்
நியூசிலாந்தின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீள்வதற்குள் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தான் தொடரை ரத்து செய்தது. இந்த தொடர்கள் ரத்துக்கு பாதுகாப்பு காரணங்கள் கூறப்பட்டாலும் இதற்கு பின்னால் அரசியல் காரணம் உள்ளன என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த தொடர்கள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பாகிஸ்தானுக்கு பல நூறு கோடி நஷ்டம் ஏற்பட்டது.

அமெரிக்காதான் காரணம்
இந்த நிலையில் நியூசிலாந்து, இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்கள் ரத்து செய்யப்பட்டதற்கு அமெரிக்கதான் காரணம் என்று பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பவாத் சவுத்ரி தெரிவித்தார். ஆப்கானிலிருந்து படைகளை வாபஸ் பெற்ற பிறகு, அங்கு தொடர்ந்து கண்காணிக்க பாகிஸ்தான் சிறந்த இடம் என்று அமெரிக்கா கருதியது. எனவே அமெரிக்க தனது ராணுவ முகாம்களை பாகிஸ்தானில் அமைக்க வேண்டும் என்று கேட்டபோது நாங்கள் மறுத்து விட்டோம்.

விலையை கொடுத்து விட்டோம்
ஒரு நாடு தலைநிமிர்ந்து ஆதிக்க நாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கும் போது அதற்கான விலையைக் கொடுக்க வேண்டி வரும். இந்த விலையைத் தான்( கிரிக்கெட் தொடர்கள் ரத்து) இப்போது அனுபவித்து வருகிறோம். இருந்த போதிலும் பாகிஸ்தான் எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளது என்று பவாத் சவுத்ரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications