பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: எதிர்கட்சி எம்.பி. படுகாயம், கார் டிரைவர் பலி
கராச்சி: பாகிஸ்தானில் எதிர்கட்சி எம்.பி. ராஷித் கோத்லி மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தில் அவரின் கார் டிரைவர் பலியானார்.
பாகிஸ்தானில் உள்ள முத்தாஹிதா குவாமி இயக்க கட்சியைச் சேர்ந்த எம்.பி. ராஷித் கோத்லி செவ்வாய்க்கிழமை கராச்சி நகரில் காரில் சென்று கொண்டிருந்தார். டிராபிக்கில் அவரது கார் நின்று கொண்டிருக்கையில் அங்கு இரண்டு பைக்குகளில் வந்த 4 மர்ம நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில் கோத்லியின் கார் டிரைவர் பலியானார். கோத்லியின் தலை, தாடை, மார்பு ஆகிய பகுதிகளில் 5 குண்டுகள் பாய்ந்தன. படுகாயம் அடைந்த கோத்லி லியாகத் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்த 48 மணிநேரத்திற்கு அவரது நிலை பற்றி எதுவும் கூற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கராச்சி அரசியலில் முக்கிய பங்காற்றி வரும் முத்தாஹிதா கட்சியினர் தாங்கள் ஒதுக்கப்படுவதாகக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்வதாக கடந்த வாரம் கடிதம் அளித்தனர். அவர்களின் ராஜினாமாவை பிரதமர் நவாஸ் ஷரீப் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.
கராச்சி நகரில் சக்திவாய்ந்தவர்களாக உள்ள முத்தாஹிதா கட்சியினர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications