பாகிஸ்தானின் அணு ஆயுத அமைப்புடன் இம்ரான் கான் திடீர் ஆலோசனை
இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் போர் பதட்டம் உருவாகியுள்ள சூழ்நிலையில், அணு ஆயுத விவகாரங்களில் முடிவெடுக்கக்கூடிய அமைப்பின் நிர்வாகிகளுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திடீர் ஆலோசனை நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புல்வாமாவில் இந்திய சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில், 40 பேர் பலியாகினர்.

இதையடுத்து நேற்று அதிகாலை, பாகிஸ்தான் வான் எல்லைக்குள் புகுந்து இந்திய போர் விமானங்கள் தீவிரவாதிகளின் முகாம்களை குண்டு வீசி அழித்துவிட்டு திரும்பியுள்ளன.
இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் இரு நாட்டு எல்லைப் பகுதியில் போர் விமானங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடுமையான பதற்றமான சூழ்நிலை எழுந்துள்ள நிலையில் இம்ரான்கான் இன்று அந்த நாட்டின் அணுஆயுத விவகாரங்களுக்கான முடிவெடுக்கும் உயர் கமிட்டி உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த கூட்டத்தில் அணுஆயுத பயன்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் இந்திய தரப்பை அச்சுறுத்துவதற்காக இவ்வாறு ஒரு கூட்டத்தை கூட்டி இருக்கக்கூடும் என்று இந்திய பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
சர்வதேச சமூகத்தில் தனித்து விடப்பட்ட பாகிஸ்தான், இந்தியாவை எதிர்த்து போர் செய்வது என்பது இயலாத காரியம். இருப்பினும் இந்திய அரசை பீதிக்குள்ளாக்கும் நோக்கத்திலும், பாகிஸ்தான் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நோக்கத்திலும் இவ்வாறு ஒரு கூட்டத்தைக் கூட்டி இருக்கலாம் என்கிறார்கள்.
அதேநேரம், அடிபட்ட வேகத்தில் இருக்கும் பாகிஸ்தான் வெறியோடு இருப்பதால், அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது என்றும் எச்சரிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications