வாங்க.. இந்த மாதமே பழகலாம்.. மோடிக்கு, இம்ரான் கான் கடிதம்!
இஸ்லாமாபாத்: இரு நாடுகள் நடுவே பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி ஆகியோர் நடுவே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று இம்ரான்கான் கேட்டுக்கொண்டுள்ளார்.
நியூயார்க்கில் இம்மாதம், நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் பொது குழு கூட்டத்தில், இவ்விரு நாட்டு வெளியுறவு அமைச்சரகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது இம்ரான் கான் கோரிக்கை.

மோடி கடிதம்
பாக். பிரதமராக பதவியேற்றதும், இம்ரான் கானுக்கு, இந்திய பிரதமர் மோடி எழுதியிருந்த கடிதத்தில், அர்த்தம் வாய்ந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கிடையே நடைபெற வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில் இம்ரான் கானும் அதற்கு இணங்கி உள்ளார்.

ஒத்துழைப்பு
பாகிஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த இம்ரான் கான், தனது வெற்றி உரையின்போது, இரு நாட்டு உறவுகளை சீரமைக்க இந்தியா ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தாலும், பாகிஸ்தான் பதிலுக்கு இரண்டு அடிகளை முன்னால் எடுத்து வைக்கும் என்று தெரிவித்திருந்தார்.

பேச்சுவார்த்தை
இம்ரான் கான் தனது கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது: இருநாட்டு பேச்சுவார்த்தை 2015ஆம் ஆண்டு துவங்கியது. (ஆனால் பதன்கோட் விமான தளத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பேச்சு வார்த்தை நின்று விட்டது). மீண்டும் பேச்சுவார்த்தை துவக்கப்பட்டு தீவிரவாதம், காஷ்மீர் உள்ளிட்ட நீண்ட கால பிரச்சனைகள் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான் விருப்பம்
கடந்த மாதம் இந்திய பிரதமர் மோடி எழுதிய கடிதத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு இம்ரான்கான் வெளியிட்ட ட்வீட்டில், பாகிஸ்தானை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் நடுவே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். காஷ்மீர் விவகாரம் குறித்தும் பேச வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications