"அந்திய சக்திகள் சதி!" புலம்பி தள்ளும் இம்ரான் கான்.. பின்னணியில் அந்த நாடா? பாக். பிரதமர் சூசகம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இக்கட்டான அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், தனது ஆட்சியைக் கவிழ்க்க அந்நிய சக்திகள் சதி செய்வதாக அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
Recommended Video
பாகிஸ்தான் நாட்டில் இப்போது இம்ரான் கான் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஏற்கனவே இருந்த பொருளாதார நெருக்கடியை இம்ரான் கான் அரசால் தீர்க்க தீர்க்க முடியவில்லை.
இதன் காரணமாகப் பாகிஸ்தானில் மிக மோசமான அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்ல தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது.

பாகிஸ்தான்
கடந்த பல ஆண்டுகளாகவே பாகிஸ்தான் பொருளாதாரம் தொடர்ந்து தடுமாறிக் கொண்டு இருந்தது. கடந்த 2019இல் புதிய பாகிஸ்தான் படைப்போம் என்ற முழக்கத்தை வைத்து ஆட்சியைப் பிடித்தவர் இம்ரான் கான். 2019 தேர்தலில் இம்ரான் கானின் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், அவருக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் ஆட்சியை அமைத்தார். இந்தச் சூழலில், எதிர்க்கட்சிகள் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானம்
எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, இப்போது கூட்டணிக் கட்சிகளும் கூட இம்ரான் கான் அரசுக்கு எதிராகத் திரும்பி உள்ளது. இந்தச் சூழலில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் இன்று பாக். நாட்டு மக்களிடையே உரையாற்றிய இம்ரான் கான், தான் பதவி விலகப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் இம்ரான் கான்
இன்று பாக். மக்களிடையே பேசிய பிரதமர் இம்ரான் கான், "பாகிஸ்தான் இப்போது மிக முக்கியமான ஒரு தருணத்தில் உள்ளது. நான் யாரிடமும் தலைவணங்கப் போவதில்லை. எனது மக்களும் யாருக்கு முன்னாலும் தலைவணங்க மாட்டார்கள். இன்னும் கூட சிலருக்கு முன்னால் நாம் எறும்புகள் போல் ஊர்ந்து செல்ல வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டிய நேரம் இது. எனக்கு இந்தியாவிலும் அமெரிக்காவிலும் நிறைய நண்பர்கள் உள்ளனர். எனக்கு யார் மீதும் எந்தக் கோபமும் இல்லை. அவர்களின் கொள்கைகளை நான் கண்டிக்கிறேன்.

பாகிஸ்தான் நிலை
நான் சிறுவயதில் இருந்தபோது, சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் உச்சத்துக்கு உயர்ந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது பாகிஸ்தான் எப்படி இந்தளவுக்கு வளர்ந்தது என்பதை கண்டறியத் தென் கொரியா கூட இங்கு வந்தது. மத்திய கிழக்கு நாடுகள், மலேசியா நாடுகளும் கூட நம்மை நோக்கி வந்தன. ஆனால், இவையெல்லாம் அப்படியே படிப்படியாக மூழ்குவதையும் நான் பார்த்தேன். சர்வதேச அரங்கில் எனது நாடு பெரும் பின்னடைவை சந்தித்ததது.

டிரோன் தாக்குதல்
நான் கண்டிப்பாக ராஜினாமா செய்ய மாட்டேன். கடைசி பந்து வரை அரசியல் களத்தில் இருந்து போராடுவேன். முன்னாள் பிரதமர் முஷாரஃப் ஆட்சியில் தான் பாகிஸ்தான் அமெரிக்காவின் வலைக்குள் சென்றது. அமெரிக்கா பாகிஸ்தானை பயன்படுத்திக் கொண்டு, தூக்கி எறிந்துவிட்டது. அதன் பின்னரே நம் மீதான பொருளாதாரத் தடைகள் அதிகரித்தன. டிரோன் தாக்குதலைக் கூட பாக். நாட்டில் அமெரிக்கா நிகழ்த்தியது.

அந்நிய சக்திகளின் சதி
பாக். நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குப் பின்னால் அந்நிய சக்தி உள்ளது. கடந்த மார்ச் முதல் வாரம் அமெரிக்கா செய்தி ஒன்றை அனுப்பியது. அது அமெரிக்காவே இல்லை அந்நிய சக்தியா எனச் சரியாகத் தெரியவில்லை. ஆனாலும் அந்த செய்தி முக்கியமானது. அதில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பாகிஸ்தான் மன்னிக்கப்படும். இல்லை என்றால், மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என எதில் கூறப்பட்டு இருந்தது. இதன் மூலம் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இந்த தீர்மானத்திற்குப் பின்னால் அந்நிய சக்தியின் திட்டமிட்ட சதி உள்ளது" என்றார்












Click it and Unblock the Notifications