ரஷ்யாவை நண்பனாக்கும் பாகிஸ்தான்? புதின் கைக்கு போன முக்கிய கடிதம்.. இந்தியாவுக்கு வார்னிங்
மாஸ்கோ: நம் நாட்டுடனான மோதலுக்கு நடுவே பாகிஸ்தான் பிரதிநிதிகள் நம்முடைய நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவுக்கு சென்றுள்ளனர். இந்த வேளையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எழுதிய கடிதத்தை அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவிடம் வழங்கி உள்ளனர். இந்த கடிதம் தற்போது விளாடிமிர் புதின் கைக்கு சென்றுள்ள நிலையில் நம் நாடு உடனடியாக சுதாரிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளங்கள், ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் கெஞ்சியதை தொடர்ந்து மோதல் முடிவுக்கு வந்தது.

இந்த மோதலில் நம் நாடு நடத்திய துல்லிய தாக்குதலில் பாகிஸ்தான் பதறிப்போனது. பெரும் இழப்பை சந்தித்துள்ளது. ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று வீராப்பாக பேசி வருகிறது. குறிப்பாக நம் நாடு குறித்து பொய் பிரசாரங்களை கட்டவிழ்த்து வருகிறது. இதனை முறியடிக்கும் வகையில் நம் நாட்டின் எம்பிக்கள் தலைமையில் 7 குழுக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் அமெரிக்கா, ரஷ்யா உள்பட நமக்கு நெருக்கமான 32 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் நம் நாட்டின் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி எடுத்து கூறி வருகின்றனர். அந்த வகையில் நமக்கும் மிகவும் நட்பு நாடாக உள்ள ரஷ்யாவுக்கு திமுக எம்பி கனிமொழி எம்பி தலைமையிலான குழுவினர் சென்றனர். அவர்கள் ரஷ்ய பிரதிநிதிகளை சந்தித்து நடந்த சம்பவம் பற்றி விளக்கின்றனர். ரஷ்யாவின் பாதுகாப்பு துறை சார்ந்த உபகரணங்கள் நம் நாட்டை எப்படி பாதுகாத்தது? பாகிஸ்தான் கூறும் பொய் பிரசாரங்களை எடுத்து கூறினர்.
இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. நம் நட்பு நாடுகளுடன் பாகிஸ்தான், நட்பு பாராட்டுவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. முதற்கட்டமாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுக்கு முக்கிய கடிதம் எழுதியுள்ளார் பாகிஸ்தான் இந்த செயல் என்பது ரஷ்யாவின் நட்பை பலப்படுத்துவதற்கான முதற்படி என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. அவ்வப்போது இருநாடுகள் இடையேயான உறவு என்பது சீர்குலைந்தாலும் கூட சீனாவுக்கு அடுத்ததாக பாகிஸ்தான் அதிகம் நம்பும் வல்லரசு நாடாக அமெரிக்கா உள்ளது.
மற்றொரு வல்லரசான ரஷ்யா நம் நாட்டுடன் நல்ல உறவில் உள்ளது. இப்படியான சூழலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கடிதம் எழுதியுள்ளார். நம் நாட்டுடன் ஏற்பட்ட மோதல் பற்றி வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் அரசியல்கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் குழு இப்போது அமெரிக்காவில் உள்ளது. அதேபோல் பாகிஸ்தான் பிரதமர் சிறப்பு உதவியாளர் சையத் தாரிக் பாதெமி தலைமையிலான குழுவினர் கடந்த 2ம் தேதி ரஷ்யா சென்றனர்.
ரஷ்யா- பாகிஸ்தான் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய நம் நாட்டின் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு எதிராகவும், பாகிஸ்தான் சந்தித்த இழப்பு பற்றியும் இந்த குழுவினர் எடுத்து கூறியுள்ளனர். இந்த சந்திப்பின்போது ரஷ்யா உடன் எரிசக்தி, போக்குவரத்து தொடர்பு, வர்த்தகம் உள்பட பிற பிரிவுகளில் பாகிஸ்தான் சேர்ந்து செயல்பட விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் பாகிஸ்தான் பிரதிநிதிகளின் குழு ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சமீபத்தில் சந்தித்ததாகவும், அப்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் , புதினுக்கு எழுதிய கடிதத்தை வழங்கி உள்ளனர். இதுதொடர்பாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் "பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எழுதிய கடிதத்தை அவரது சிறப்பு உதவியாளர் சைரத் தாரிக் பதாமி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு வழங்கியுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்யாவுடனான தனது மூலோபாய உறவுகளை வலுப்படுத்த பாகிஸ்தான் விரும்புவது தொடர்பாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் கடிதத்தின் முழு சாராம்சம் பற்றிய விவரம் வெளியாகவில்லை. இது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இதுதான் நம் நாட்டுக்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் நம் நாட்டை எடுத்து கொண்டால் ரஷ்யாவுடன் நீண்டகாலமாக நல்ல உறவு உள்ளது. நம் நாட்டில் பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்படும் தளவாடங்களில் 60 சதவீதத்துக்கு அதிகமானவை ரஷ்யாவின் தயாரிப்பாகும். பாதுகாப்பு துறையில் நம் நாடு ரஷ்யாவை தான் அதிகம் சார்ந்துள்ளது. இந்த உறவை குறிவைத்து தான் பாகிஸ்தான், ரஷ்யாவை நெருங்க துடிப்பதாகவும், இதனால் இந்தியா உடனடியாக சுதாரிக்க வேண்டும். ஏனென்றால் ரஷ்யா - பாகிஸ்தான் நல்லுறவு என்பது நமக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்கின்றனர் எக்ஸ்பர்ட்டுகள்.












Click it and Unblock the Notifications