ஏமாத்திட்டாங்க! தெருவில் இறங்கி போராடுங்கள்.. பாக் நாட்டு மக்களுக்கு பிரதமர் இம்ரான் கான் அழைப்பு..!
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனக்கெதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் நிலையில் தனக்கு ஆதரவாக தனது நாட்டு மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும் என்றும், வெளிநாட்டு சதிகாரர்கள் இஸ்லாமாபாத்தில் தலைமையை மாற்றப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசாங்கத்திற்கு எதிராக தேசிய சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள், பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக வெளிப்படையாகக் களமிறங்கியுள்ளதால், நம்பிக்கையில்லா தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர்.

பிரதமர் இம்ரான் கான்
இந்நிலையில் தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் நிலையில் இன்று தனது நாட்டு மக்களை தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் வெளிநாட்டு சதிகாரர்கள் இஸ்லாமாபாத்தில் தலைமையை மாற்றப் பார்க்கிறார்கள் என்று மீண்டும் அவர் கூறியுள்ளார்.

மக்களுக்கு அழைப்பு
"இவர்களை எப்படி எதிர்கொள்வது என்று நான் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்), நாளை நான் அவர்களை எப்படி எதிர்கொள்வேன் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். என் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது போன்ற விஷயங்கள் நடக்கும் வேறொரு நாடாக இருந்திருந்தால், மக்களே. வீதிக்கு வந்திருப்பார்கள்.இன்றும் நாளையும் வீதிக்கு வருமாறு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

வீதிகளில் போராட்டம்
இந்த தேசத்தின் நலன் கருதி நீங்கள் உங்கள் மனசாட்சிக்காக அவ்வாறு செய்ய வேண்டும்.எந்தக் கட்சியும் உங்களை வற்புறுத்தக்கூடாது.நீங்கள் வெளியே இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தெருக்களில். நீங்கள் அனைவரும் வெளியே சென்று நீங்கள் விழிப்புடன் இருப்பதைக் காட்ட வேண்டும்" என்று இம்ரான் கான் ARY நியூஸ் உடனான கேள்வி பதில் அமர்வின் போது மக்களிடம் கூறினார்.

இளைஞர்கள் குரல் எழுப்ப வேண்டும்
வெளிநாட்டு சக்திகளின் சதிக்கு எதிராக பாகிஸ்தான் இளைஞர்கள் கிளர்ந்தெழுந்து குரல் எழுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் மீதான ஊழல் வழக்குகளைத் தீர்ப்பதற்கு அதிகாரம் தேடுகிறார்கள் என்று இம்ரான் கான் குற்றம் சாட்டினார். ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் இம்ரான் கானுக்கு எதிராக வெளிப்படையாகக் களமிறங்கியுள்ளதால், நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்க்கட்சிகள் உறுதியாக நம்புகின்றன. இருப்பினும், இம்ரான் கான் இந்த தீர்மானம் தோல்வியடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நினைக்கவே முடியாது
"முன்கூட்டிய தேர்தல்தான் சிறந்த வழி என்று நான் சொன்னேன்... ராஜினாமா செய்வது பற்றி என்னால் நினைக்கவே முடியாது... நம்பிக்கையில்லாப் தீர்மானத்துக்கு எதிராக கடைசி நிமிடம் வரை போராடுவேன் என்று நம்புகிறேன்," என்று ஏற்கனவே இம்ரன் கான் கூறியிருந்தார். பாகிஸ்தானின் எந்தப் பிரதமரும் ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக முடித்ததில்லை. மேலும், பாகிஸ்தானின் வரலாற்றில் இதுவரை எந்த பிரதமரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கமும் செய்யப்படவில்லை. அதே நேரத்தில் இதுபோன்ற சவாலை எதிர்கொள்ளும் மூன்றாவது பிரதமர் இம்ரான் கான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications