இதுதான் நவீன மிஷினா? பாகிஸ்தான் உள்ளே புகுந்த ஈரான் ஏவுகணைகள்.. கண்டுபிடிக்காத ரேடார்கள்.. ஷாக்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உள்ளே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதை பாகிஸ்தான் ரேடார் கணிக்க தவறி உள்ளது.
கடந்த 2022 மார்ச் 9ம் தேதி இந்தியாவிற்கு சொந்தமான சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றது. இரண்டு நாடுகளிலும் இது பதற்றத்தை ஏற்படுத்தியது. மற்ற சமயங்களில் இது போன்ற விஷயங்கள் போரை உருவாக்கும். ஆனால் இரண்டு நாடும் இதை சமயோஜிதமாக கையாண்டது.

அவசரப்படாமல் பாகிஸ்தான் இந்த விவகாரத்தை அமைதியாக கையாண்டது. இந்தியாவும் உடனுக்குடன் இதற்கு பதில் அளித்ததால் பெரிய மோதல் தவிர்க்கப்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்குள் 124 கிலோ தூரம் வரை இந்த பிரம்மோஸ் ஏவுகணை சென்றது. 40 ஆயிரம் அடி உயரத்தில் இந்த ஏவுகணை பறந்து, பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுள்ளது.
சேதம் இல்லை: பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்த ஏவுகணை எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. முதலில் இந்தியாவின் சிர்சா பகுதியில் இது ஏவப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்திய தரப்பு இதற்கு மறுப்பு தெரிவித்தது. இந்தியாவின் சிர்சா ஏவுகணை தளத்தில் இருந்து இது ஏவப்படவில்லை. மாறாக பிரம்மோஸ் ஏவுகணை ரகசிய சாட்டிலைட் ஏவுதளம் ஒன்றில் இருந்துதான் ஏவப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் இந்த ஏவுகணையை டிராக் செய்ய முடியவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், பராமரிப்பு பணியின் காரணமாகவும் இந்த ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
கண்டுபிடிக்க முடியவில்லை; இதில் குண்டுகள், ஆயுதங்கள் இல்லை என்பதால் சேதம் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் ராணுவத்தின் Inter-Services Public Relations பிரிவின் இயக்குனர் பாபர் இப்திக்கார் பேட்டி அளித்துள்ளார். இந்த ஏவுகணை 3 மேக் வேகத்தில் பறந்தது. பாகிஸ்தான் எல்லைக்குள் 124 கிலோ மீட்டர் வரை வந்தது. ஏவப்பட்ட நேரத்தில் இருந்து 6.46 நிமிடங்கள் இது பறந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்தது. இந்த ஏவுகணை பிரம்மோஸ் ஏவுகணை ஆகும். இது ஆயுதம் பொருத்தப்பட்டது அல்ல. பயிற்சிக்காக தயார் நிலையில் இருந்த practice version பிரம்மோஸ் ஆகும்.
இந்த ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதாவது பாகிஸ்தான் ராணுவத்தின் ரேடார் இந்த ஏவுகணையை கண்டுபிடிக்க முடியவில்லை. ஊருக்குள் ஏவுகணை வந்தும் பாகிஸ்தான் ரேடார் அதை கண்டுபிடிக்கவில்லை.
ஈரான் தாக்குதல்: பாகிஸ்தான் உள்ளே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதையும் பாகிஸ்தான் ரேடார் கணிக்க தவறி உள்ளது. பாகிஸ்தான் ரேடாரில் பதிவாகாமல் ஏவுகணை உள்ளே வந்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பலூச்சி போராளிக் குழுவான ஜெய்ஷ் அல் அட்லின் இரண்டு தளங்கள் ஈரான் நாட்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டு உள்ளன. ஈரானின் உயரடுக்கு ராணுவ குழு மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
ஏற்கனவே ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அந்த அமைப்பின் இலக்குகளை ஏவுகணைகளால் தாக்கிய ஈரான் தற்போது பாகிஸ்தானில் உள்ள அந்த அமைப்பின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல் அட்ல் தீவிரவாத அமைப்பின் முகாம்களில் ஈரான் சரமாரியாக ஏவுகணை வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தானில் இரண்டு இடங்களில் ஈரான் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் ஈரான் பாதுகாப்புப் படையினர் மீது அந்த தீவிரவாத அமைப்பு முன்பு தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக இப்போது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. "இரண்டு தளங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன" என்று ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகக் கூறிய பாகிஸ்தான், இந்தச் சம்பவம் "கடுமையான விளைவுகளை" ஏற்படுத்தக்கூடும் என்றும், "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் எச்சரித்து உள்ளது. இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது, கடுமையான விளைவுகளை ஈரான் சந்திக்க போகிறது என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் பாகிஸ்தான் - ஈரான் இடையே போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே பல நாடுகளுக்கு இடையே போர் நடந்து வருகிறது. முக்கியமாக ஈரான் ஆதரவு ஹவுதி படைகள் தீவிரமாக அமெரிக்காவை எதிர்த்து வருகின்றன.












Click it and Unblock the Notifications