இந்தியாவின் அடியால் தடுமாறும் பாகிஸ்தான்.. புதினிடம் ஓடிய ஷெரீப்.. பதற்றத்தை தணிக்க வைக்க கோரிக்கை
மாஸ்கோ: ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தியாவுடனான மோதலைத் தீர்க்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் புதினின் உதவியை நாடியதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சில வாரம் இந்த மோதல் போக்கு நிலவிய நிலையில், கடந்த மே 10ம் தேதி தான் அமைதி திரும்பியது. அதேநேரம் இந்தியா இன்னுமே பாகிஸ்தான் உடன் வேறு எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை.

ரஷ்யா உதவி
குறிப்பாகச் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் பெரிய பாதிப்பை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளிடம் இந்த விவகாரத்தைப் பாகிஸ்தான் எடுத்துச் செல்கிறது. இந்தியாவுடனான மோதலைத் தீர்க்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் புதினின் உதவியை நாடியுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
அதாவது ஷெபாஸ் ஷெரீப்பின் சிறப்பு உதவியாளர் சையத் தாரிக் ஃபதேமி, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சில நாட்களுக்கு முன்பு மாஸ்கோவில் வைத்துச் சந்தித்துள்ளார். அப்போது ஷெரீப்பின் வேண்டுகோள் அடங்கிய கடிதத்தையும் வழங்கியுள்ளார்.. பாகிஸ்தான் எந்தவொரு ராஜதந்திர முன்மொழிவையும் வரவேற்கிறது என்று சையத் தாரிக் ஃபதேமி தெரிவித்தார்.
அமைதி பேச்சுவார்த்தை
அவர் மேலும் கூறுகையில், "அண்டை நாடுகள் எப்போதும் போர்ச் சூழலில் வாழ முடியாது.. எந்தவொரு நடுநிலையான பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப் பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. உட்கார்ந்து பேசி பிரச்சினையைத் தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை விளக்க அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யா உட்பட அண்டை நாடுகளுக்கு அதிகாரிகளை அனுப்பியுள்ளோம்.. பிராந்தியத்தில் பதற்றத்தைக் குறைக்கக்கூடிய ரஷ்யாவின் எந்தவொரு முயற்சியையும் பாகிஸ்தான் ஆதரிக்கும். இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதை எங்கள் விருப்பம்" என்றார்.
பஹல்காம் தாக்குதல்
கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்தது. மே 7ம் தேதி அன்று பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத கட்டமைப்பை இந்தியா தாக்கியது.
இந்தியாவின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கிறேன் எனச் சொல்லி பாகிஸ்தானுக்கும் தாக்குதல் நடத்த முயன்றது. இருப்பினும் பாக். தாக்குதலை முறியடித்த இந்தியா திரும்பத் தாக்கியது. இந்தியாவின் தாக்குதலைத் தாங்க முடியாத பாகிஸ்தான் கடந்த மே 10ம் தேதி போர் நிறுத்த கோரிக்கை வைத்தது. அதில் உடன்பாடு ஏற்படவே நெருக்கடி தணிந்தது.
அமெரிக்கா ரஷ்யா
முன்னதாக ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைப்பேசியில் உரையாடியபோது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் விவகாரம் உட்பட சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் விவாதம் நடந்ததாக ரஷ்ய அதிபர் மாளிகை அதிகாரி யூரி உஷாகோவ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "மத்திய கிழக்கு விவகாரம், இந்தியா பாகிஸ்தான் ஆயுத மோதல் குறித்தும் அவர்கள் பேசினர்" என்றார்.












Click it and Unblock the Notifications