குழந்தைகள் பெறுவதில் "செஞ்சுரி" அடிக்கத் துடிக்கும் 35 பிள்ளைகளின் தந்தை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 35 குழந்தைகளின் தந்தையான ஒருவர் 100 குழந்தைகளை பெறும் வரை ஓய்வது இல்லை என்ற முடிவோடு உள்ளார். இந்நிலையில் அவர் 4வது முறை திருமணம் செய்து கொள்ள பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறார்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள க்வெட்டாவை சேர்ந்தவர் சர்தார் ஜான் முகமது கில்ஜி(46). 5 படுக்கையறைகள் உள்ள மண் வீட்டில் வசிக்கும் அவருக்கு 3 மனைவிகள், 35 குழந்தைகள்.
அடங்கப்பா, 35 குழந்தைகளா என்று ஆச்சரியப்பட வேண்டாம். ஏன் என்றால் அவர் 100 குழந்தைகள் பெறுவது தான் தனது இலக்கு என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த ஆசைக்கு அவரது மனைவிகளும், குழந்தைகளும் கூட ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தற்போது அவர் மீண்டும் திருமணம் செய்ய ஒரு பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறார். பாகிஸ்தானில் வசிக்கும் முஸ்லீம் ஆண்கள் 4 பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி உண்டு. தன்னால் முடிந்த அளவுக்கு நிறைய குழந்தைகளை பெறுவது மத கடமை என்று நம்புகிறார் ஜான்.
ஜானுக்கு அவரது பெற்றோர் தான் பெண்கள் பார்த்து மூன்று திருமணத்தையும் நடத்தி வைத்துள்ளனர்.
இது குறித்து அவர் கூறுகையில்,
எனக்கு 26 வயது இருக்கையில் முதல் திருமணம் நடந்தது. அடுத்த ஆண்டே 5 மாத இடைவெளியில் 2 திருமணங்கள் செய்து கொண்டேன் என்றார்.
அடுத்த திருமணத்திற்கான பெண் ஃபேஸ்புக் மூலம் கூட கிடைக்கலாம். ஏனென்றால் அவரின் 100 குழந்தை ஆசை குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால் அவருக்கு ஃபேஸ்புக் மூலம் பல வரன்கள் வருகின்றது.