பாக்.: அண்ணனை பழிவாங்க இனிப்பில் விஷம் கலந்த ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர்- 30 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அண்ணனை பழிவாங்க இனிப்புகளில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து 30 பேர் பலியாக ஒருவர் காரணமாக இருந்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர் காலித் மகமூத். அவரது அண்ணன் தாரிக் மகமூத். தாரிக் இனிப்புக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வியாபாரம் தொடர்பாக அவர் தனது தம்பியை திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த காலித் தனது அண்ணனை பழிவாங்க மற்றும் பாடம் கற்பிக்க முடிவு செய்தார். கடையில் இருந்த இனிப்புகளில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்தார். இந்நிலையில் உள்ளூர்காரர் ஒருவர் தனக்கு பேரன் பிறந்த மகிழ்ச்சியை கொண்ட தாரிக்கின் கடையில் வந்து ஏராளமான இனிப்புகளை வாங்கிச் சென்று தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு அளித்தார்.
பூச்சிக்கொல்லி மருந்து கலந்த இனிப்புகளை சாப்பிட்ட பிறந்த குழந்தையின் தந்தை, 6 மாமாக்கள், அத்தை உள்பட 30 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் 5 குழந்தைகளும் அடக்கம். மேலும் 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மகமூத் சகோதரர்களை கைது செய்தனர். விசாரணையில் காலித் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.