பாக்.ல் பயங்கரம்: காதலியை நண்பர்களோடு சேர்ந்து பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட காதலன் கைது
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் காதலியை தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் லய்யா மாவட்டத்தில் வாழ்ந்து வரும் கண் பார்வையற்ற தம்பதியரின் 20 வயது மகளை அதே பகுதியில் உள்ள காய்கறி கடையில் வேலை பார்த்து வந்த முகம்மது சபீக் என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார். வாய் பேச இயலாத அப்பெண்ணை தானே மணமுடித்து கொள்வதாக அப்பெண்ணின் பெற்றோரிடமும் உறுதியளித்துள்ளார் சபீக்.இதனால் தங்களது மகளுடன் சபீக் பழகுவதற்கு அப்பெண்ணின் பெற்றோர் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு அந்த இளம்பெண்ணை தான் வேலை செய்யும் கடையின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்ற சபீக், அங்கிருந்த தனது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு உடன்பட அப்பெண் மறுக்கவே, நண்பர்களோடு சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் சபீக். பின்னர், அப்பெண்ணை கொலை செய்து அருகிலிருந்த மரத்தில் தூக்கில் தொங்க விட்ட சபீக் தலைமறைவானார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணுடன் சபீக்குக்கு இருந்த காதல் பற்றி தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து போலீசாரின் தேடுதல் வேட்டையில் தற்போது சபீக் கைது செய்யப் பட்டு சிறையிலடைக்கப் பட்டுள்ளார். விசாரணையில் நண்பர்களோடு சேர்ந்து தனது காதலியை பலாத்காரம் செய்ததை சபீக் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சபீக்கின் கூட்டாளிகளைப் போலீஸ் தேடி வருகின்றனர்.
கடந்த மாதம் உத்திரப்பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சகோதரிகள் இருவர் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்டனர். தற்போது அதேபோன்று இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு மரத்தில் தூக்கிலிடப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications