பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனை இந்தியாவுக்கு பாராட்டு.. சந்திரயான் -2 க்கு பெரும் புகழாரம்
கராச்சி: சந்திரயான் 2 விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்க முயற்சி செய்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனை பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியா கடந்த ஜூலை 22ம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது. இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை மென்மையான முறையில் தரையிறங்குவதாக இருந்தது.
நிலாவில் இறங்க 2.1 கிலோமீட்டர் தூரம் இருக்கும் போது திடீரென விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் சந்திரயான் 2 விண்கலத்தின் மற்றொரு முக்கிய கருவியான வரும் ஆர்ப்பிட்டரை வைத்து விக்ரம் லேண்டர் நிலவில் இருக்கும் இடத்தை இஸ்ரோ கண்டுபிடித்துள்ளது. இதனால் மீண்டும் விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு ஏற்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
இந்தியாவின் இந்த முயற்சிக்கு உலகம் முழுவதில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான நமீரா சலிம் சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் ஏவியதற்காக இந்தியாவுக்கும் இஸ்ரோவுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கராச்சியைச் சேந்த இணையதள அறிவியல் இதழுக்கு பேட்டி அளித்த விண்வெளி வீராங்கனை நமீரா சலிம், "நிலாவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக மென்மையாக இறக்குவதற்கான வரலாற்று முயற்சியில் ஈடுபட்ட இந்தியாவுக்கு இஸ்ரோவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நிலவை ஆராய்ச்சி செய்யும் சந்திரயான் 2 பணி என்பது உண்மையில் தெற்காசியாவின் மாபெரும் பாய்ச்சலாகும். இது தெற்காசிய பிராந்தியத்தை மட்டுமல்ல உலகம் முழுவதும் விண்வெளி பணிகளை பெருமைப்படுத்துகிறது. தற்போது தெற்காசியா பிராந்தியத்தில் விண்வெளித் துறையில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. விண்வெளி பணியை எந்த நாடு வழி நடத்துக்கிறது என்பது முக்கியமல்ல. பூமியில் நம்மை அனைத்து அரசியல் எல்லைகளும் பிரிக்கும் நிலையில், அதை கடந்து விண்வெளி நம்மை இணைக்கிறது" என கூறியுள்ளார்.