பாரீஸ் தியேட்டரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் அடையாளம் கண்டுபிடிப்பு
பாரீஸ்: பாரீஸ் நகரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வெள்ளிக்கிழமை இரவு ஸ்டேடியம், உணவகங்கள் என 6 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 129 பேர் பலியாகியுள்ளனர், 352 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் 88 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் படாகிளான் அரங்கில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவரின் விரல் சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ஆய்வில் அந்த விரல் பாரீஸை சேர்ந்த உமர் இஸ்மாயில் முஸ்தபா(29) என்பவருடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆயுத குழுக்களுடன் தொடர்பில் இருந்த அவர் பிரான்ஸ் உளவுத் துறையின் கண்காணிப்பில் இருந்தவர். ஆனால் அவர் மீது இதுவரை தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து புகார் எழுந்தது இல்லை.
இந்நிலையில் உமரின் தந்தை மற்றும் சகோதரரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.