குடும்ப பிரச்சனை: முன்னாள் மனைவி உள்பட 6 உறவினர்களை சுட்டுக் கொன்ற மாஜி மரீன்
பெனிசில்வேனியா: அமெரிக்காவின் பெனிசில்வேனியாவில் முன்னாள் கடற்படை வீரர் குடும்ப பிரச்சனை காரணமாக தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை சுட்டுக் கொலை செய்துள்ளார்.
அமெரிக்காவின் பெனிசில்வேனியா மாநிலம் மான்ட்கோமரி கவுன்ட்டியைச் சேர்ந்தவர் பிராட்லி வில்லியம் ஸ்டோன்(35). அவருக்கும் நிக்கோல் என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் பிராட்லியும், நிக்கோலும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதையடுத்து குழந்தைகள் யாரிடத்தில் இருப்பது என்பது தொடர்பாக பிராட்லிக்கும், நிக்கோலுக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது.
இந்நிலையில் குழந்தைகள் நிக்கோலுடன் இருந்து வந்துள்ளனர். திங்கட்கிழமை காலை பிராட்லி சௌடர்டன்னில் உள்ள நிக்கோலின் சகோதரி பட்ரிசியா பிளிக்கின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் பட்ரிசியா, அவரது கணவர் ஆரன் பிளிக், அவர்களின் மகள் நினா(14) ஆகியோரை சுட்டுக் கொன்றார். பட்ரிசியாவின் மகன் அந்தோனி பிளிக் படுகாயம் அடைந்தார்.
அங்கிருந்து கிளம்பிய பிராட்லி லேண்ட்ஸ்டேல் அருகே உள்ள வீட்டுக்கு சென்று நிக்கோலின் தாய் ஜோயன் ஹில், பாட்டி பட்ரிசியா ஹில் ஆகியோரை சுட்டுக் கொன்றார். அதன் பிறகு ஹார்லிஸ்வில்லுக்கு சென்ற பிராட்லி தனது முன்னாள் மனைவி நிக்கோலை சுட்டுக் கொன்றுவிட்டு தனது குழந்தைகளுடன் ஓடிவிட்டார். ஆனால் குழந்தைகள் நிக்கோலின் வீட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
போலீசார் பென்ஸ்பர்கில் உள்ள பிராட்லியின் வீட்டுக்கு சென்று வெளியே நின்றபடி அவரை சரண் அடையுமாறு தெரிவித்தனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. இதையடுத்து போலீசார் பிராட்லியை தேடி வருகிறார்கள்.
குடும்ப பிரச்சனை காரணமாக 6 பேர் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.