அமெரிக்காவை முந்திய சீனா...இந்தியாவுக்கு நெருக்கடி...12 நாடுகளில்....ராணுவ தளம்...பென்டகன் பகீர்!!
வாஷிங்டன்: உலகிலேயே பெரிய ராணுவ பலத்தைக் கொண்டு இருக்கும் சீனா இந்தோ பசிபிக் பகுதிகளில் பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகள் உள்பட 12 நாடுகளில் தனது ராணுவத்தை அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க காங்கிரஸ் சபையில் தாக்கல் செய்த அறிக்கையில் பென்டகன் (அமெரிக்க ராணுவம்) தெரிவித்துள்ளது.
சீனாவிடம் கடலின் மேற்பரப்பில் இருந்து போரிடும் 130 கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள் உள்பட மொத்தம் 350 போர்க் கப்பல்கள் உள்ளன. ஆனால், அமெரிக்காவிடம் 293 போர்க் கப்பல்கள்தான் உள்ளன. ஆனால் அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த 11 விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளன. சீனாவிடம் எட்டுதான் உள்ளன. இன்னும் இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை கட்டுவதற்கு சீனா தயாராகி வருகிறது.

மின்னணு போர் திறன்கள்
மேலும், நீண்ட தொலைவு ஏவுகணைகள், கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு, விண்வெளி மற்றும் மின்னணு போர் திறன்கள் என்று சீனா தன்னை பலப்படுத்திக் கொண்டு வருகிறது. அணுசக்தி போர் தளவாடங்களை இரட்டிப்பாக்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டுள்ளது.

டெல்லிக்கு ஆபத்து
மியான்மர், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, சிசில்ஸ், தான்சான்யா, அங்கோலா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் ராணுவ தளத்தை சீனா அமைத்து வருகிறது. இந்தோ - பசிபிக் பகுதிகளில் சீனா ராணுவ தளத்தை அமைத்து வருவது டெல்லிக்கு ஆபத்தானது என்று பென்டகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஆப்ரிக்காவில் இருக்கும் திஜிபவுட்டி என்ற இடத்தில் 2017ல் ஆகஸ்ட் மாதம் ராணுவ தளத்தை சீனா அமைத்துள்ளது.

ராணுவத்தில் நவீனம்
சீனாவின் அணுசக்தி பலம் நிலம், கடல், வான் என்று அடுத்த பத்தாண்டுகளில் பலம் பெறும், மேலும் அதன் எண்ணிக்கையையும் அதிகரிக்கும். இத்துடன் தனது படை பலத்தை நவீனமயமாக்குதல், பல்வகைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு உதவி
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி மற்றும் குவாடர் துறைமுகங்கள் சீனாவின் பயன்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இத்துடன் நின்றுவிடவில்லை பாகிஸ்தானுக்கும் போர் தளவாடங்களை கொடுப்பதற்கு சீனா முன் வந்துள்ளது. அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எட்டு டீசல் எலக்ட்ரானிக் நீர் மூழ்கிக் கப்பல்கள், பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட மறைந்து இருந்து தாக்கும் பீரங்கிக் கப்பல்களை வழங்குவதற்கு முன் வந்துள்ளது. இது இந்தியாவுக்கு அதிக நெருக்கடி கொடுக்கும் என்று பென்டகன் குறிப்பிட்டுள்ளது.

முந்தும் சீனா
இந்தியாவிடம் ஒரே ஒரு விமானம் தாங்கி கப்பல், 10 அவசர கால போர் கப்பல்கள், 14 போர் கப்பல்கள், 11 சிறிய போர்க் கப்பல்கள், 15 டீசல்-மின்சார மற்றும் இரண்டு அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. ஆனால், சீனாவிடம் 52 அவசர கால போர் கப்பல்களும், பொதுவாக போர் காலங்களில் அனைத்து நாடுகளும் பயன்படுத்தும் போர் கப்பல்கள் 33 உள்ளன.

இந்தியாவின் நிலை
எப்படி பார்த்தாலும் இந்தியாவை விட படை பலத்தில் சீனா முந்தி சென்று கொண்டு இருப்பது இந்தியாவுக்கு கவலை அளிக்கும் செய்தியாக இருக்கிறது என்று பென்டகன் தெரிவித்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலான விக்ராந்தி வரும் 2021ஆம் ஆண்டில் இருந்து தனது பணியைத் துவக்கும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தது.












Click it and Unblock the Notifications