பிலிப்பைன்ஸில் 173 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 38 பேர் பலி, 17 பேர் மாயம்
மணிலா: பிலிப்பைன்ஸில் 173 பேருடன் சென்ற எம்.பி. நிர்வாணா என்ற படகு கடல் சீற்றத்தில் சிக்கி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 38 பேர் பலியாகியுள்ளனர், 17 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.
பிலிப்பைன்ஸில் உள்ள லெய்டே மாகாணத்தில் இருக்கும் ஆர்மோக் நகரில் இருந்து 173 பேருடன் எம்.பி. நிர்வாணா என்ற படகு நேற்று காலை 9.30 மணிக்கு கமோட்டெஸ் தீவில் உள்ள பிலார் நகருக்கு கிளம்பியது. படகு கிளம்பிய சிறிது நேரத்தில் கடல் சீற்றத்தில் சிக்கி நிலை குலைந்து கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 38 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்வசமாக உயிர் பிழைத்துள்ளனர்.
படகில் இருந்த 17 பேரை காணவில்லை. இது குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு பணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்டவர்களில் 3 அமெரிக்கர்களும் அடக்கம்.
கவிழ்ந்து கிடந்த படகை பிடித்துக் கொண்டிருந்த பலரை மீட்பு பணியினர் 7 படகுகளில் ஏற்றி கரை சேர்த்தனர். கடல் சீற்றத்தால் தான் படகு கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெற்கு லெய்டே மாகாணத்தில் 83 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 70 பேர் மாயமாகினர். சூறாவளியால் அந்த படகு கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.