பிலிப்பைன்ஸில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை!
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவோ பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் பலரும் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதேபோல் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக 69 பேர் உயிரிழந்ததுடன், 150க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பான்டயான் புனித பீட்டர் அப்போஸ்தலர் தேவாலயம் இடிந்து விழுந்தது.

விசாயாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநக்கம் லெய்டே பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 10.4 கிமீ ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. சாலைகளில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவோ பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மிண்டானாவோ பகுதியில் உள்ள டாவோ ஓரியண்டலில் உள்ள மனாய் நகருக்கு அருகில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
நிலநடுக்கம் காரணமாக சில பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் பலரும் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். அதேபோல் நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்து 300 கிமீ தொலைவில் அமைந்துள்ள கடற்கரைகளில் சுனாமி ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications