அமெரிக்காவில் ரன்வேயில் திடீரென தீப் பிடித்து எரிந்த விமானம்... 21 பேர் படுகாயம்
மியாமி: அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் இருந்து வெனிசுலா நோக்கிப் புறப்பட்ட டைனமிக் இன்டர்நேஷனல் ஏர்வேஸ் விமானம் ரன்வேயில் ஓடியபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 21 பயணிகள் படுகாயம் அடைந்தனர், ஒருவர் தலையில் அடிப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டைனமிக் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 767-200ER ரக விமானம் ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள போர்ட் லவ்டர்டேல் விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 12.30 மணியளவில் 110 பயணிகளுடன் வெனிசுலாவின் தலைநகரமான காரகாஸ் நோக்கி புறப்பட்டது.

ஓடு பாதையில் சென்ற விமானத்தின் என்ஜினில் திடீரென தீ பிடித்தது. அது வேகமாக விமானத்தின் மையப்பகுதிக்கு பரவியது. விமானத்தில் இருந்த பைலட், மற்றும் பணிப்பெண்கள் தீ அணைப்பான் மூலம் (Fire Extinguisher) தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் தீ மளமளவென பரவி அந்த பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. ஓடுபாதைக்கு விரைந்த அந்த விமானத்தைக் கண்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர். செய்வது அறியாமல் திகைத்தனர். தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் உடனடியாக அங்கு விரைந்தன.
இந்நிலையில் விமானத்தில் இருந்து குதித்த 21 பயணிகள் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒரு பயணிக்கு தலையில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவசரக்கால கதவுகள் திறக்கப்பட்டு அவ்விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் 12.37 மணிக்குள் ஓடுபாதை தளத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர். விமானத்துக்குள் ஏறிய மீட்புப் படையினர் அனைவரையும் பாதுகாப்பாக கீழே இறக்கி விட்டனர். அதேவேளையில், தீயணைப்பு படையினர் தீயை சில நிமிடங்களுக்குள் அணைத்து, விமானத்தை மிகப்பெரிய ஆபத்திலிருந்து பாதுகாத்தனர்.
வெளியேற்றப்பட்ட பயணிகள் அனைவரும் பஸ்கள் மூலம் விமான நிலைய ஓய்வறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கே தங்க வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து விமானத்தில் இருந்த பயணி ஒருவர் கூறுகையில், விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எனது பின் புறம் வேகமாக வெடிப்பது போன்ற ஒரு சத்தம் கேட்டது.பின்னால் திரும்பி பார்த்தபோது தீ பிடித்து எறிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக விமானத்தின் முன்புறம் ஓடி வந்துவிட்டேன். விமானத்தில் இருந்த பெண்களும் குழந்தைகளும் கத்தி கூச்சலிட்டனர். அவசரக்கதவுகள் திறக்க 60 வினாடிகள் ஆயின. அதற்குள் விமானத்துக்குள் புகை மண்டலம் சூழ்ந்ததால் சில பயணிகள் சுவாசிக்க சிரமப்பட்டு, மூச்சுத்திணறலுக்குள்ளாகினர், என்றார்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட டைனமிக் ஏர்லைன், ஃபோர்ட் லாடர்டேல், நியுயார்க், வெனிசுலா, கயானா ஆகிய நாடுகளுக்கு தனது விமான சேவையை மேற்கொண்டு வருகிறது. புறப்படுவதற்கு முன்பாக எரிபொருள் கசிவு ஏற்பட்டதே விபத்துக்கு காரணம் என்றும், இது குறித்து விமானக் குழுவினரை ஏற்கனவே எச்சரித்திருந்ததாகவும் விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications