தென் கொரியாவில் ரன்வே வேலியில் மோதி தீப்பிடித்து எரிந்த விமானம்! விபத்து நடந்தது எப்படி? ஷாக் வீடியோ
சியோல்: தென் கொரியாவில் ரன்வே வேலியில் மோதி விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் இதுவரை 47 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. லேண்டிங் கியரில் ஏற்பட்ட பழுது காரணமாகவே இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. விமான விபத்து தொடர்பாக விசாரணையை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இதுவரை 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலரை மீட்கும் பணி நடந்து வருகிறது.
தாய்லாந்தின் பாங்கங்கில் இருந்து ஜெரு ஏர் பிளைட் 2216- என்ற விமானம் 175 பயணிகள், 6 சிப்பந்திகள் என 181 பேருடன் வந்த விமானம் தென் கொரியாவில் விபத்தில் சிக்கியுள்ளது. தென் கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள முவான் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய போது திடீரென சறுக்கிய விமானம், விமான நிலைய வேலி மீது மோதியுள்ளது.

லேண்டிங் கியரில் பழுது
விமானத்தின் லேண்டிங் கியரில் ஏற்பட்ட பழுதே விமானம் ரன்வேயில் இறங்கி சரி வர ஓட முடியாமல் போனதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. விமானத்தின் மீது பறவை மோதியதால் லேண்டிங் கியர் செயல் இழந்ததாகவும், இதனால், லேண்டிங் கியர் இன்றி விமானத்தை தரையிறக்கும் போது இந்த விபத்து நேரிட்டதாக சொல்லப்படுகிறது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகிவில்லை.
விமான விபத்து தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு தென் கொரியாவின் பொறுப்பு அதிபர் சோய் சுங்க் மாக் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டு இருக்கிறார். உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் விபத்து நடைபெற்றுள்ளது. விபத்து தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
விமானத்தில் பயணம் செய்த 47 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. விமானம் மோதி தீ பிடித்த நிலையில், விமானத்திற்குள் இருந்து பயணிகளை மீட்கும் பணி அவசர அவசரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து கரும்புகை வெளியேறி வரும் காட்சிகள் உள்ளூர் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது.
2 பேர் உயிருடன் மீட்பு
விமான விபத்து தொடர்பாக முவான் சர்வதேச விமான நிலையத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தை நேரில் பார்த்த பயணிகளும் பீதியில் உறைந்தனர். விபத்துக்குள்ளான விமானத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை உயருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக, கஜகஸ்தானில் விமானம் விபத்தில் சிக்கியது. அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 'எம்ப்ரேயர் 190' ரக பயணிகள் விமானம் ஐரோப்பிய நாடான அஜர்பைஜானின் தலைநகர் பாகுவில் இருந்து, ரஷ்யாவிற்கு சென்றது. அப்போது, விமானம் கீழே இறங்கும் போது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications