காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: பாக். அமைதிப் பேச்சைச் சீர்குலைக்க சதி- பிரதமர் கண்டனம்
நியூயார்க்: இன்று காலை ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகர் பகுதியில் உள்ள காவல் நிலையம் மற்றும் சம்பா பகுதியில் உள்ள ராணுவ முகாம் போன்றவற்றின் மீது ராணுவ உடையில் நுழைந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி உட்பட 7 காவலர்கள், இரண்டு தீவிரவாதிகள் மற்றும் 3 பொதுமக்கள் கொல்லப் பட்டார்கள்.
பலியானவர்கள் எண்ணிக்கை இன்னும் கூடலாம் என முதல்வர் உமர் அப்துல்லா அச்சம் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் இக்கொடூரத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

விரைவில் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் தீவிரவாதிகள் இத்தகைய தாக்குதல் நடத்தி உள்ளது அமைதியைக் குலைக்க சதி என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தாக்குதலில் பலியான ராணுவ அதிகாரி, காவலர்கள் மற்றும் பொதுமக்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications