பூடானுக்கு ரூ.10,000 கோடி நிதி.. மழை நிவாரணம் தரவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு நடுவே மோடி அறிவிப்பு
திம்பு: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக பூடான் சென்றுள்ள நிலையில் அந்நாட்டுக்கு ரூ.10,000 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மழை நிவாரண நிதியை போதிய அளவு மத்திய அரசு தரவில்லை என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்த அறிவிப்பை பிரதமர் மோடி செய்துள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக பூடான் உள்ளது. இந்த நாடு அளவில் மிகவும் சிறியது. இந்தியாவை போல் சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இதனா்ல பூடானுக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்ல உறவு இருப்பது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

பொதுவாகவே இந்தியா-பூடான் இடையேயான உறவு என்பது நன்றாகவே உள்ளது. இந்தியா சார்பில் பூடானுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனை சீனா விரும்புவது இல்லை. மேலும் பூடானின் டோக்லாம் பீடபூமியை சீனா கைப்பற்ற துடித்து வருகிறது. தற்போது இந்த பகுதி இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் சீனாவால் எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது.
இதற்கிடையே தான் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக பூடான் செல்ல திட்டமிட்டு இருந்தார். இது அரசு முறை பயணமாக திட்டமிடப்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக திட்டமிட்டப்படி பிரதமர் மோடியால் நேற்று பூடான் செல்ல முடியவில்லை. இதையடுத்து இன்று பிரதமர் மோடி பூடான் புறப்பட்டு சென்றார்.
சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி பூடானின் பரோ சர்வதேச விமான நிலையம் சென்று இறங்கினார். அங்கு அவருக்கு வரேவேற்பு அளிக்கப்பட்டது. இருநாடுகள் இடையேயான உறவை வலுப்படுத்தவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பிரதமர் மோடி பூடான் சென்றுள்ளார். இந்தியா உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
குறிப்பாக திம்புவில் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்டுள்ள அதிநவீன தாய் மற்றும் குழந்தைகளின் சிகிச்சைக்கான மருத்துவமனையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடி ரூ.10 ஆயிரம் கோடி நிதியுதவியை பூடானுக்கு அறிவித்தார். இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் பூடானில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இந்தியா சார்பில் இந்த ரூ.10,000 கோடி நிதியுதவி ஒவ்வொரு கட்டமாக வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் பல மாநிலங்கள் மத்திய அரசு போதிய நிதியை விடுவிக்கவில்லை என குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக மழை நிவாரண நிதியை மத்திய அரசு தரவில்லை என தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில் பிரதமர் மோடி பூடானுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications