ரியாத் அனைத்து மகளிர் டிசிஎஸ் மையத்தில் மோடி... ஊழியைகளுடன் செல்பி எடுத்தார்!
ரியாத்: சவூதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி ரியாத் நகரில் உள்ள பெண்கள் மட்டுமே பணியாற்றக் கூடிய டிசிஎஸ் நிறுவன அலுவலகத்திற்கு விஜயம் செய்தார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள ஊழியைகள், பிரதமருடன் செல்பி எடுத்துக் கொள்ள போட்டா போட்டி போட்டனர். பிரதமரும் இளம் ஐடி ஊழியைகளுக்கு புன்னகையுடன் போஸ் கொடுத்தார்.
சவூதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று காலை டிசிஎஸ் நிறுவனத்திற்குச் சென்றார். இங்கு பெண் ஐடி ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் ஊழியைகளுடன் பேசினார் மோடி.
பெருமை...
அவர்களிடையே அவர் உரையாற்றுகையில், "இங்குள்ள இளம் ஐடி ஊழியைகள், சவூதி அரேபியாவின் பெருமையைப் பறை சாற்றுகிறார்கள். இவர்களைச் சந்திப்பதில் பெருமை அடைகிறேன்.
பெண்களின் பங்கு...
மனித வளத்தில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. பெண்கள் வளர்ச்சி அடைந்தால் அந்த நாடும் வளர்ச்சி அடையும், முன்னேறும். இங்குள்ள பெண்கள் உலகுக்கே சிறந்த உதாரணமாக விளங்குகிறார்கள்" என்றார் மோடி.
மன்னருடன் சந்திப்பு...
முன்னதாக நேற்று ரியாத் நகரில் வசிக்கும் இந்தியர்களிடையே பேசினார் பிரதமர் மோடி. இன்றைய காலை நிகழ்ச்சிக்குப் பின்னர் பிரதமர் மோடி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸைச் சந்தித்துப் பேசினார். அவருடன் மதிய உணவையும் உண்டார்.
நாள் பயணம்
2 நாள் பயணமாக சவூதிக்கு வந்துள்ள பிரதமர் இன்றுடன் தனது பயணத்தை முடித்துக் கொள்கிறார்.