பாரீஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உச்சகட்ட பாதுகாப்பில் பிரான்ஸ் !
பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரம் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு. அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு நாட்டு தலைவர்கள் பாரீஸ் நகருக்கு வந்துள்ளதால் பிரான்ஸ் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பருவகால மாற்றம் மற்றும் புவிவெப்பமயமாதல் தொடர்பான ஐக்கியநாடு சபை சார்பில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளதால் இங்கு உச்சக்கட்ட பாதுகாப்புக்கு பிரான்ஸ் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பருவ நிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன. உலக அளவில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு, மற்றும் நாடுகள் இடையிலான உறவு ஆகியன குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜப்பான், சீனா , இந்தியா பிரதமர்கள் உள்பட 140 க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்..டிசம்பர் 11-ம் தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
இதற்காக டெல்லியில் இருந்து பாரீஸ் புறப்பட்டு சென்றுள்ளார் பிரதமர் மோடி, மாநாட்டின் இடையே ஒபாமா, ஜிங்பிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை தனியாக சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், அண்மையில் பாரீசில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர். இந்தநிலையில் பாரிசுக்கு உலக தலைவர்கள் பலர் வரவிருப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பணியில் ராணுவம் மற்றும் போலீசார் உள்பட ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் உச்சகட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications