நியூயார்க் பயணத்தை முடித்து கலிபோர்னியா வந்தடைந்தார் பிரதமர் மோடி... உற்சாக வரவேற்பு
சான்ஜோஸ் : அமெரிக்காவின் நியூயார்க் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கலிபோர்னியாவில் உள்ள சான்ஜோஸ் நகர் வந்தடைந்தார்.
அங்கு அவருக்கு இந்திய தொழிலதிபர்கள், 10 மாகாணங்களின் மேயர்கள் ஆகியோர் ஒன்று திரண்டு வரவேற்றனர். பின்னர் பேர்மாண்ட் ஹோட்டலில் சீக்கியர்கள், குஜராத்தியர்கள் வரவேற்பளித்தனர்.

தொடர்ந்து அவர் மின்சார கார்கள் தயாரிக்கும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவன அலுவலகத்திற்கு சென்று அதன் சிஇஓ எலன் மஸ்கை சந்திக்கிறார்.
பின்னர் சிலிகான் வேலி ஜாம்பவான்களான ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக், மைக்ரோசாஃப்ட்-ன் சத்ய நாதெல்லா, கூகுள் நிறுவனத்தின் சுந்தர்பிச்சை, அடோப் நிறுவனத்தின் சாந்தனு நாராயண், க்வால்காம் நிறுவனத்தின் பால் ஜேக்கப், சிஸ்கோ நிறுவனத்தின் ஜான் சேம்பர்ஸ், இந்திய தொழில் முனைவோர்கள் தலைவர் வெங்கடேஷ் சுக்லா ஆகியோரை சந்திக்கிறார்.
இறுதியில் டிம் குக், சத்ய நாதெல்லா, சுந்தர்பிச்சை உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட மிகச் சிலருடன் மட்டும் இரவு உணவருந்துகிறார்.
தனது சுற்றுப் பயணத்தின் 5 வது நாளில் பேஸ்புக் மற்றும் கூகுள் தலைமையகத்திற்கு மோடி செல்கிறார். பின்னர் சான்ஜோஸில் இந்திய வம்சாவளியினரை மோடி சந்தித்து பேசுகிறார்.
சிலிகான் வேலியை விட்டு புறப்படும் முன், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் ஆகியோரை சந்தித்து ஜ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெறுவது குறித்து ஆலோசிக்கிறார்.
இந்நிலையில் சிலிக்கான் வேலி பயணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அங்கு 2 நாள் பயணத்தை தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
33 ஆண்டுகளுக்குப் பிறகு கலிபோர்னியா மாகாணத்தின் சிலிகான் வேலி செல்லும் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications