பிரிட்டனில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் விசா பிரச்சினைக்கு தீர்வு:கேமரூனிடம் மோடி வலியுறுத்தல்
லண்டன்: பிரிட்டனில் உயர் கல்வி பயிலச் செல்லும் இந்திய மாணவர்கள் விசா பெறுவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூனிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
மூன்று நாள் அரசு முறைப் பயணமாக வியாழக்கிழமை பிரிட்டன் சென்ற மோடி, அந்நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். முன்னதாக அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூனை லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் மோடி சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், பிரிட்டனுக்கு கல்வி கற்பதற்காகச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்றாண்டுகளாகக் கணிசமாகக் குறைந்து வருவது குறித்தும் கேமரூனிடம் மோடி கவலை தெரிவித்ததாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கான விசா பெறும் நடைமுறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனுக்குச் செல்லும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக அங்கு கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த படிப்புக்குப் பிந்தைய இரண்டாண்டு விசா அனுமதியை அந்நாட்டு அரசு ரத்து செய்தது. இதன் காரணமாக பிரிட்டனில் கல்வி பயிலச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருகிறது.
கடந்த 2010-11-ஆம் ஆண்டில் பிரிட்டனில் கல்வி கற்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 18,536-ஆக இருந்ததாகவும், தற்போது 2012-13-இல் 10,235-ஆகக் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.