தனியாக இருந்த இம்ரான் கான் மனைவி.. வீட்டை உடைத்து உள்ளே புகுந்த போலீசார்! கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்
இம்ரான் கானுக்கு இப்போது தோஷகானா வழக்கு தலைவலியாக மாறியுள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று வழக்கு விசாரணைக்கு ஆஜரான நிலையில், மறுபுறம் போலீசார் அவரது வீட்டை இடித்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர்.
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் குழப்பம் தொடர்ந்து வருகிறது. ஒரு பக்கம் பொருளாதார குழப்பம் என்றால் மற்றொரு அரசியல் குழப்பமும் சூழ்ந்துள்ளது. அங்குப் பொருளாதார நெருக்கடியால் விலைவாசி உச்சத்தில் இருக்கிறது.
இதைச் சமாளிக்கவே பாகிஸ்தான் கடுமையாகப் போராடி வருகிறது. இந்தச் சூழலில், இப்போது அங்கு எதிர்க்கட்சி தலைவர் இம்ரான் கான் தொடர்ச்சியாக அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

இம்ரான் கான்
இன்னும் சில மாதங்களில் பாகிஸ்தானில் தேர்தல் நடைபெறுகிறது. இப்போது அங்கு இம்ரான் கான் போராட்டங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இது ஆளும் ஷெரீப் அரசுக்குத் தலைவலியாக மாறியுள்ளது. இதனால் இம்ரான் கானை அரசியல் அரங்கில் இருந்து வெளியேற்ற ஆளும் தரப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி தோஷகானா வழக்கில் அவரை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தோஷகானா வழக்கு விசாரணையில் அவர் நீண்ட காலம் ஆஜராகாத நிலையில், நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

போலீஸ் முயற்சி
கடந்த சில நாட்களுக்கு முன்பே அவரை கைது செய்ய போலீசார் முயன்ற போது, இம்ரான் கான் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டு நின்று கைது செய்வதைத் தடுத்தனர். இந்தச் சூழலில் இந்த வழக்கு விசாரணை நேற்று வந்த நிலையில், அப்போது இம்ரான் கான் நேரில் ஆஜரானார். இதையடுத்து அவர் இம்ரான் கானுக்கு எதிரான பிடிவாரண்டை ரத்து செய்தார். பிரதமர் பதவியில் இருந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பதவிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.

பிடிவாரண்ட்
அதில் இந்த தோஷகானா வழக்கு தான் அவருக்குப் பெரிய தலைவலியாக மாறியிருந்தது. நீண்ட காலம் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதால் இந்த வழக்கில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்தச் சூழலில் தான் லாகூரில் இருக்கும் தனது வீட்டில் இருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஜி-11 நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக இம்ரான்கான் தனது காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது அவரது கார் விபத்தில் சிக்கியது. இதனால் சிறிது தாமதமானாலும் கூட கடைசியில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டார்.

உள்ளே நுழைந்த போலீஸ்
இதையடுத்து பிடிவாரண்ட்டை ரத்து செய்ய நீதிமன்றம், வழக்கு விசாரணை மார்ச் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இது ஒரு பக்கம் நடக்க மற்றொரு புறம், 50க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக லாகூரில் இருக்கும் இம்ரான் கான் வீட்டில் நுழைந்தனர். கதவுகளை உடைத்து பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அப்பகுதியில் இருந்த மரங்கள் மற்றும் தடுப்புகளை அகற்றி உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த இம்ரான் கான் ஆதரவாளர்கள் மீது போலீசார் கடும் தாக்குதல் நடத்தினர். மேலும், இம்ரான் கான் வீட்டையும் அவர்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

தனியாக இருந்த மனைவி
இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மேலும், இந்தத் தாக்குதல் நடந்த போது அங்கே வீட்டில் இம்ரான்கான் மனைவி மட்டும் தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆளும் தரப்பு இம்ரான் கானை அச்சுறுத்துவதாகவும் போலீசார் அத்துமீறி நடந்ததாக இம்ரான் கான் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அனைத்து வழக்கிலும் ஜாமீன் பெற்ற போதிலும், தேர்தலுக்கு முன்பு எப்படியாவது இம்ரான் கானை சிறையில் அடைத்துவிட வேண்டும் என்று ஆளும் தரப்பு திட்டமிடுவதாகவும் அவர்கள் விமர்சித்தனர்.

தோஷகானா வழக்கு
தோஷகானா வழக்கு தான் இப்போது அவருக்குத் தலைவலியாக மாறியுள்ளது. தோஷகானா என்பது வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்ட அதிகாரப்பூர்வ பரிசுகள் வைக்கப்படும் அரசாங்க களஞ்சியமாகும். அரசு பொறுப்பில் இருப்போர் வெளிநாடுகளில் இருந்து பெறும் பரிசுகளை இந்த களஞ்சியத்திற்குத் தான் அனுப்ப வேண்டும். ஆனால், அப்படி அனுப்பாமல், தன்னிடம் வைத்துக் கொண்டதாகவே இம்ரான் கான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இம்ரான் கான் தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தே வருகிறார்.












Click it and Unblock the Notifications