பாரீஸில் இன்று போலீஸ்காரர் சுட்டுக் கொலை, ஹோட்டலில் குண்டுவெடிப்பு: பீதியில் பிரான்ஸ்
பாரீஸ்: பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ அலுவலகத்தில் தாக்குதல் நடந்த மறுநாளே தெற்கு பாரீஸில் மர்ம நபர் ஒருவர் திடீர் என்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீசார் காயம் அடைந்தனர். அதில் பெண் போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புதன்கிழமை புகுந்த 2 பேர் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகினர். இந்த வழக்கில் ஒருவர் போலீசில் இன்று சரண் அடைந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சகோதரர்கள் இருவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் பிரான்ஸ் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை தெற்கு பாரீஸில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மலகாப் பகுதியில் இரண்டு பைக்குகள் மோதிக் கொண்டுள்ளன. இதையடுத்து இரண்டு பைக்குகளில் வந்த நபர்கள் நடுத்தெருவில் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை பார்த்த பெண் உள்ளிட்ட 2 போலீசார் அவர்களின் பிரச்சனையை தீர்க்க வந்துள்ளனர்.
அப்போது இரண்டில் ஒரு பைக்கில் வந்தவர் திடீர் என்று போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு மெட்ரோ ரயிலில் ஏறி தப்பியோடிவிட்டார். இந்த சம்பவத்தில் 2 போலீசாரும் காயம் அடைந்தனர். அதில் பெண் போலீஸ்காரர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
நேற்றைய சம்பவத்திற்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே பாரிஸில் உள்ள மசூதி அருகே இருக்கும் லியன் ஹோட்டலில் இன்று காலை குண்டுவெடிக்கும் சப்தம் கேட்டுள்ளது. ஆனால் கேஸ் சிலிண்டர் வெடித்திருக்கும் என்று கூறப்படுகிறது.
பாரீஸ் நகரில் அடுத்தடுத்த நாள் துப்பாக்கிச்சூடுகள் நடந்துள்ளது அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியும், பீதியும் அடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications