"1000+ சடலங்கள்.." வீடு முழுக்க அழுகிய நிலையில் நாய்கள்.. பார்த்தவுடன் பதறிய போலீசார்! என்ன நடந்தது
ஒரே ஒரு வீட்டில் சுமார் 1000க்கும் மேற்பட்ட நாய்களின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
சியோல்: நாய்கள் என்றால் அனைவருக்குமே பிடிக்கும் என்று சொல்வார்கள். ஆனால், தென் கொரியாவில் ஒருவரின் வீட்டில் எங்குப் பார்த்தாலும் நாய்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
உலகில் அதிகப்படியான மக்களால் விரும்பி வளர்க்கப்படும் செல்ல பிராணிகளில் ஒன்றாக நாய்கள் இருக்கிறது. பல கோடி பேர் நாயை தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒன்றாகவே கருதி வளர்க்கின்றனர்.
இதன் காரணமாகவே ஒவ்வொரு வீடுகளிலும் ஏதோ தங்கள் சொந்த வீடுகள் போல நாய்கள் ஜாலியாக உலா வரும்.. நாய்களும் மனிதர்கள் மீதும் வைக்கும் பாசமும் அன்பும் மிகப் பெரியது.

நாய்கள்
கொஞ்சக் காலம் பாசமாக இருந்தாலே போதும்.. நாய்கள் அன்பைப் பொழியும். அதேநேரம் அனைத்து மனிதர்களும் நாயை இதுபோல பார்ப்பதில்லை. நாய் எவ்வளவு தான் பாசம் காட்டினாலும் கூட சில நேரங்களில் மனிதர்கள் நாய்களைக் கொடூரமாகவே நடத்துகின்றனர். அதுபோல ஒரு மிக மோசமான சம்பவம் தான் தென் கொரியாவில் நடந்துள்ளது. அங்குள்ள ஒருவரின் வீட்டில் 1000க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடந்துள்ளது. தென் கொரிய நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நாய்களைத் துன்புறுத்தி அவர் கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

எப்படி வெளிச்சத்திற்கு வந்தது
இது தொடர்பான செய்தியை ஹாங்காங்கை சேர்ந்த சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.. தென் கொரியாவில் ஜியோங்கி மாகாணத்தில் உள்ள யாங்பியோங்கில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஒருவர் வளர்த்து வந்த செல்ல நாய் திடீரென மாயமாகியுள்ளது. அதைத் தேடிக் கொண்டு அவர்கள் வந்த போது தான், இந்த வீட்டைக் கண்டுபிடித்துள்ளனர். உள்ளே பார்த்தால், எங்குப் பார்த்தாலும் நாய்களின் சடலங்கள் இருந்துள்ளது. இதைப் பார்த்தவுடன் பதறிய அவர்களுக்கு முதலில் என்ன நடந்தது என்றே புரியவில்லை.

சடலங்கள்
இதையடுத்து பதறியடித்துக் கொண்டு ஓடிய அவர், போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பின்னரே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கில் 60 வயது மதிக்கத்தக்க நபர் குற்றவாளியாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த நபர் கைவிடப்பட்ட நாய்களை மீட்டு, பட்டினி போட்டு நாய்களைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.. நாயை இனப்பெருக்கம் உள்ளிட்ட வணிக லாபத்திற்காக வளர்ப்பவர்கள் அதை வைத்து லாபமீட்ட முடியாத போது, அவற்றை அப்புறப்படுத்த இந்த நபருக்கு விற்பதாக விலங்கு நல ஆர்வலர்கள் சாடியுள்ளனர்.

எப்படி
இது தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகையில், "நாய்களை வைத்து லாபமீட்டுபவர்கள்.. அவை வயதான பிறகு, அதன் மூலம் வருவாய் கிடைக்காது என்பது தெரிந்தவுடன் நாய்களை இவருக்குக் கொடுத்து விடுகிறார்கள். ஒவ்வொரு நாய்க்கும் 7.7 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பணத்தை வழங்குகிறார்கள். ஆனால், இந்த நபர் அவற்றைக் கூண்டில் அடைத்து.. சாப்பாடு போடாமல் கொன்றுவிடுகிறார். அவரது வீட்டை வைத்துப் பார்க்கும் போது. 2020 முதலே அவர் இதுபோல நாய்களைப் பூட்டி பட்டினியால் கொன்றதாகத் தெரிகிறது" என்றார்.

எங்கும் நாய்களின் சடலங்கள்
அந்த நபரின் வீட்டில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகளும் இணையத்தில் பரவி வருகிறது. அதில் கூண்டுகள், சாக்குகள், பெட்டிகள் என்று அனைத்திலும் நாய்களின் சடலங்கள் இருக்கிறது. சம்மந்தப்பட்ட அந்த நபரின் வீட்டிற்கு விலங்கு நல ஆர்வலர்கள் சென்றுள்ளனர். அங்கே இருந்த காட்சிகளைப் பார்த்து அவர்களே சற்று மிரண்டு விட்டனர். கீழே தரையில் அழுகிய நாய்கள் சடலங்கள் இருக்கும் நிலையில், அதன் மேலே மற்றொரு லேயரில் அவர் நாய்களின் சடலங்களைக் குவித்துள்ளார். இப்படிதான் அவர் ஒரே இடத்தில் அதிக சடலங்களை வைத்துள்ளார்.

தீவிர சிகிச்சை
அங்கே உயிருடன் இருந்த மற்ற நாய்களும் தோல் நோய்கள் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அங்கிருந்து மீட்கப்பட்ட நான்கு நாய்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. அவற்றில் இரண்டு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. தென் கொரியாவில் சமீப ஆண்டுகளில் இதுபோல விலங்குகள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் பலமடங்கு அதிகரித்துள்ளன. விலங்குகளைக் கொடுமைப்படுத்துவது தொடர்பாகப் பதிவாகும் அதிகாரப்பூர்வ வழக்குகளின் எண்ணிக்கை 2010ல் 69ஆக இருந்த நிலையில், இப்போது அவை 914 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications