டல்லாஸில் பொங்கல் விழா: கட்டுக்கடங்காத தமிழர் கூட்டம்
டல்லாஸ்(யு.எஸ்). மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி அரங்கம் மற்றும் உணவு அரங்கம் இரண்டிலும் ஒரே நேரத்தில் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்த அந்த வளாகமே மினி தமிழ்நாடு போல் காட்சியளித்தது.
பொங்கல் திருவிழா 2014
புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகத்தின் முதல் நிகழ்ச்சியாக கடந்த சனிக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. இணையதளம், ஃபேஸ்புக், இமெயில் மற்றும் இவைட்(Evite) என அனைத்து வடிவத்திலும் அழைப்பு விடுத்திருந்தனர். அழைப்பிற்கு செவி சாய்த்த தமிழர்கள் பெருந்திரளாக திரண்டு வந்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்து விட்டனர். டல்லாஸில் உள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகளிலிருந்தும் வந்திருந்த சுமார் 35 குழந்தைகள் தமிழ்த் தாய் வாழ்த்து பாட, மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது.
நவீன நடனத்துடன் சங்கே முழங்கு
தமிழ்ச் சங்கத்தின் கொள்கை முழக்கம் போல் அமைந்த, சங்கே முழங்கு பாடலுக்கு வித்தியாசமான முறையில் நடனமாடினர். புவனா நடனம் அமைத்திருந்தார். அடுத்ததாக ஈஸ்வரா நாட்டியாலாவின் கிராமிய நடனம் இடம் பெற்றிருந்தது. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் பாடல் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து சின்னஞ்சிறு குழந்தைகள் கொண்ட குழவினர் திருப்புகழ் நடனம் ஆடினார்கள். கிரிஜா அந்த நடனத்தை வடிவமைத்திருந்தார்.
அமெரிக்கத் தமிழ் குழந்தைகள் கலக்கிய வார்த்தை விளையாட்டு
பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி போல், 'ஒரு வார்த்தை நூறு டாலர்' என்ற தமிழ் வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோப்பல், அவ்வை மற்றும் ப்ளேனோ தமிழ்ப் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள், குழுவுக்கு நான்கு பேர் வீதம் 14 குழுக்கள் பங்கேற்றனர்.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் என்ற பெயருக்கு விடை கண்டுபிடிப்பது அமெரிக்கக் குழந்தைகளுக்கும் பெரிய விஷயமில்லை தான். ஆனால், தமிழகமே மறந்து போன ‘கடிதம்' என்ற சொல்லுக்கு விடை தேடிய லாவகம் இருக்கிறதே, அடடா, தமிழ் இந்த குழந்தைகளின் நாவில் நாட்டியமாடுகிறது என்றே சொல்லலாம். பார்வையாளர்களும் பரவசத்துடன் கண்டு களித்தார்கள். அர்ஜீன்,சங்கமன், அனிரூத், ப்ரணவ் ஆகியோரின் குழு வெற்றி பெற்றார்கள்.
உள்ளங்கை செல்போனில் திருவள்ளுவர் ஓவியம்
குழந்தைகளுக்கான ஓவியப்போட்டியில் 65 குழந்தைகள் கலந்து கொண்டு பல்வேறு ஓவியங்களை சமர்ப்பித்தனர். ஒன்பது வயதுக்குட்பட்ட 'புதுமைப் பொங்கல்' பிரிவில் விதுலா முதல் பரிசு பெற்றார்.
பத்து முதல் 13 வயதுக்குட்பட்ட ' இந்தியாவின் ஒப்பற்ற தலைவர்கள்' பிரிவில் பகத் சிங்கை வரைந்த பிரகத் முதலாவதாக வெற்றி பெற்றார். 14 - 17 வயது ‘காலத்தை வென்ற தமிழர்' பிரிவில் உள்ளங்கையில் செல்போன். செல்போனுக்குள் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் ஆப்(app) வரைந்து அர்ச்சிதா முதல் பரிசு பெற்றார். பெண்களுக்கான கோலப்போட்டியில் பத்மினி, லட்சுமி, உமா குழுவினர் வெற்றி பெற்றார்கள்.
சூப்பர் ஜோடி
குழந்தைகளுக்கு வார்த்தை விளையாட்டு என்றால் பெரியவர்களுக்கு வாழ்க்கை விளையாட்டாக ‘ சூப்பர் ஜோடி' நிகழ்ச்சியை நடத்தினார்கள். ஜோடிகளுக்குள்ளான பொருத்தம் பற்றி முதல் சுற்று இருந்தது. கணவரைப் பார்த்து, உயர்நிலைப் பள்ளி காலத்தில் மனம் கவர்ந்த காதலி யார் என்ற ஏடாகூடமான கேள்வியை கேட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.
எந்த கிடுக்குப்பிடியிலும் சிக்காமல் சில ஜோடிகள் தப்பித்து விட்டனர். அடுத்த சுற்றில் நடனம், பாட்டு, காமெடி என அவரவர்களுக்கு பிடித்தமான வித்தையை காட்டினர். இறுதிச் சுற்றில் 'சூழ்நிலைக் கேள்வி' கேட்கப்பட்டது. குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி என்ற சூழலுக்கு ஒரு தம்பதியினர் நடத்திய உரையாடல் போல் எல்லா வீட்டிலும் இருந்து விடாதா என்று ஏக்கப் பெருமூச்சு அரங்கத்தில் எழுந்தது. காயத்ரி மற்றும் ராஜாமணி நிகழ்ச்சியை வழங்கினார்கள், போட்டியில் ருமிதா - கிருபா சங்கர் தம்பதியினர் முதல் பரிசு , அனிதா -சங்கர் இரண்டாவது பரிசு மற்றும் ஹரி -சுஜி ஜோடி மூன்றாவது பரிசு பெற்றார்கள்
ஏ.ஆர்.ரஹ்மானின் திருக்குறள் பாடலும் கல்லூரி பெண்கள் நடனமும்
ஏ.ஆர்.ரஹ்மானின் திருக்குறள் பாடலுக்கு குழந்தைகளின் நடனம் இடம்பெற்றது. தலைவர் கீதா வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து தமிழ்ச் சங்கத்தில் பணியாற்றும் பல்வேறு குழுக்களை மேடையில் அறிமுகப்படுத்தினார். புதிய குழு உறுப்பினர்களை பார்வையாளர்கள் பலத்த கரகோஷத்துடன் வரவேற்றனர்.
ஆயிரம் பேர்
நிகழ்ச்சியின் இறுதியாக யுனிவர்சிட்டி ஆஃப் டெக்சஸ் மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. சங்க செயலாளர் கஸ்தூரி கோபிநாத் நன்றியுரை ஆற்றினார். இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 10 குழுக்களை கொண்ட 100 தன்னார்வ தொண்டர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்கள். சங்க வரலாற்றிலேயே முதன் முறையாக அதிக அளவில் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.
எந்த ஒரு பிரபலமும் இல்லாமல் ஆயிரம் பேரை திரட்டிக் காட்டிய டல்லாஸ் தமிழ்ச் சங்க நிகழ்ச்சி, அமெரிக்கத் தமிழர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் ஒரு வித எழுச்சியை காட்டுவதாக கருதப்படுகிறது.