வெண் புள்ளியால் அவதிப்படும் மாணவியை பாட வைத்து பாராட்டிய போப் பிரான்சிஸ்
வாடிகன்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஆன்லைன் மூலம் சிகாகோவில் உள்ள வெண் புள்ளிகளால் அவதிப்படும் மாணவியை தனக்காக பாடுமாறு கூறி அவரை உற்சாகப்படுத்தினார்.
போப் ஆண்டவர் பிரான்சிஸ் அமெரிக்காவில் வசிக்கும் சிலருடன் ரோமில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக பேசினார். அவர் சிகாகோவில் உள்ள கிறிஸ்டோ ரே ஜெசூட் உயர் நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியருடன் ஆன்லைன் மூலம் உரையாடினார்.

அப்போது அந்த பள்ளியைச் சேர்ந்த வேலரி ஹெரேரா(17) என்ற மாணவி எழுந்து தனக்கு வெண் புள்ளிகள் இருப்பதால் பிற குழந்தைகள் தன்னை கிண்டல் செய்வதாகக் கூறி அழுதார். மேலும் அவர்களின் கிண்டலில் இருந்து தப்பிக்க தனது கவனத்தை இசையின் பக்கம் திருப்பியதாக வேலரி கூறினார்.
இதை கேட்ட போப் வேலரியை தனக்காக ஒரு பாட்டு பாடுமாறு கூறினார். வேலரி தயங்கவே தைரியமாக இருக்க வேண்டும் என்று போப் தெரிவித்தார். இதையடுத்து அந்த மாணவி போப் பிரான்சிஸுக்காக ஸ்பானிஷ் மொழியில் ஒரு பாட்டு பாடினார்.
பாட்டை கேட்ட போப் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. மாணவிக்கோ போப் ஆண்டவர் தன்னிடம் பேசி, பாட வைத்ததால் மகிழ்ச்சி ஏற்பட்டது.
இது குறித்து மாணவி வேலரி கூறுகையில்,
நான் பதட்டமாக இருந்தேன். போப் ஆண்டவருடன் பேசுகையில் அழத் துவங்கிவிட்டேன். நான் பல ஆண்டுகளுக்கு முன்பு கற்றுக்கொண்ட பாடலை அவருக்காக பாடினேன். அவர் என் பாட்டைக் கேட்டு எனக்கு நன்றி தெரிவித்தார் என்றார்.
போப் இந்த மாதம் அமெரிக்கா செல்கிறார். தனது சுற்றுப்பயணத்தின்போது அவர் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார்.












Click it and Unblock the Notifications