வீட்டில் தவறி விழுந்த போப்பாண்டவர்.. போப் பிரான்சிஸ்க்கு கையில் காயம்! என்ன நடந்தது
வாடிகன்: வாடிகன் நகரில் உள்ள காசா சாண்டா மார்டா இல்லத்தில் போப் பிரான்சிஸ் நேற்று கீழே விழுந்தார். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
கத்தோலிக்க மதத் தலைவராக போப்பாண்டவர் செயல்பட்டு வருகிறார். இத்தாலியின் வாடிகன் நகரில் போப்பாண்டவர் வசித்து வருகிறார். தற்போது போப் ஆண்டவராக பிரான்சிஸ் உள்ளார். இவருக்கு வயது 88.

வயது முதிர்வு காரணமாக போப்பாண்டவர் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறார். அதோடு கடந்த 2 ஆண்டுகளாக அவர் வீல் சேரை பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தான் போப் பிரான்சிஸ் தனது இல்லத்தில் திடீரென்று விழுந்துள்ளார். வாடிகன் நகரில் உள்ள காசா சாண்டா மார்டா இல்லத்தில் போப்பாண்டவர் நேற்று காலை விழுந்துள்ளார். இதனால் அவரது வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக எலும்பு முறிவு ஏற்படவில்லை.
இருப்பினும் இந்த காயம் என்பது பயப்படும்படியாக இல்லை. நேற்றைய தினம் காயத்தோடு 5 கூட்டங்களில் போப் பிரான்சிஸ் பங்கேற்றுள்ளார். வாடிகனில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் நோசிபோ நெளஸ்கா-ஜீன் ஜெசிலை போப்பாண்டவர் சந்தித்தார். அப்போது அவர் தனது வலது கையில் காயம் ஏற்பட்டு இருந்ததால் கவண் அணிந்திருந்தார்.
போப்பாண்டவர் சமீபகாலமாகதொடர்ந்து உடல்நல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். கடந்த மாதம் படுக்கையில் இருந்து அவர் கீழே விழுந்தார். இதில் கன்னத்தில் காயம் ஏற்பட்டது. அதற்கு முன்பாக 2022ல் போப்பாண்டவர் முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டார். அன்று முதல் சக்கர நாற்காலியை அவர் பயன்படுத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications