அரபு நாட்டுக்கு முதல் முறையாக சென்றுள்ள போப் பிரான்சிஸ்.. ஏமன் போரை நிறுத்த பேச்சு நடத்துவாரா?
அபுதாபி: தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவோம் என போப் பிரான்சிஸுடன் அபுதாபி அரசு உறுதிமொழியில் கையெழுத்திட்டுள்ளது. இந்த நிலையில் ஏமன் நாட்டில் நடைபெறும் போரை நிறுத்த வலியுறுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமீரகத்தில் 2019-ஆம் ஆண்டை சகிப்புத்தன்மைக்கான ஆண்டாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் மத நல்லிணக்க கூட்டத்தில் கலந்துகொள்ள போப் ஆண்டவர் பிரான்சுக்கு அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைப்பு விடுத்தார்.
இதையேற்று போப் பிரான்சிஸ் அபுதாமி சென்றுள்ளார். அங்கு அவர் அபுதாபி மக்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் நாம் வேறு வேறாக இருந்தாலும் சகோதரர்கள்தான். நாம் இங்கு ஒன்றிணைந்துள்ளது அமைதியை வலியுறுத்துவதற்காகவும் அமைதியை மேம்படுத்துவதற்காகவும்தான் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமைதியை காப்பது என்றும் தீவிரவாதத்தை வேரறுப்பது, சகோதரத்துவத்துடன் இருப்பது என்றும் அபுதாபி அரசுடன் போப் பிரான்சிஸ் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் மத நல்லிணக்க கூட்டம் தொடங்கியது. இதில் போப் ஆண்டவர் பங்கேற்றார். முதல் முறையாக அரபிய நாட்டுக்கு சென்றுள்ள போப் பிரான்சிஸ் ஏமன் உள்நாட்டு போர் குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் அவர் ஐக்கிய அரபு அமீரக பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏமன் போர் குறித்து மிகுந்த கவலை தெரிவித்திருந்தார்.