நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்க மறுப்பு: போராட்டத்தில் குதித்த இந்து அமைப்பினர்
காத்மாண்டு: நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்கக் கோரிய திட்டம் நிராகரிக்கப்பட்டதையடுத்து அங்கு போராட்டங்கள் நடந்து வருகிறது.
நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம் மீதான வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்ற அரசியல் சாசன திருத்தத்தை ஏற்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுத்துவிட்டனர். நேபாளம் மதச்சார்பற்ற நாடாகத் தான் இருக்கும் என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

அரசியல் சாசனத்தில் நேபாளத்தை மதச்சார்பற்ற நாடு என்பதற்கு பதிலாக இந்து நாடு என்று திருத்தம் செய்ய வேண்டும் என நேபாள ராஷ்ட்ரிய பிரஜதந்திரா கட்சி அல்லது தேசிய ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக அவை தலைவர் சுபாஷ் சந்திர நெம்பங் தெரிவித்தார்.
இதையடுத்து அவையில் இது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ராஷ்ட்ரிய பிரஜதந்திரா கட்சியின் கமல் தாபா கேட்டுக் கொண்டார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் 601 பேர் கொண்ட அவையில் வெறும் 21 பேர் தான் தாபாவின் கட்சி கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கடந்த 2006ம் ஆண்டு மக்கள் இயக்கம் வெற்றி பெற்றதையடுத்து 2007ம் ஆண்டு நேபாளம் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நேபாளத்தை மதச்சார்பற்ற நாடு என்பதற்கு பதில் இந்து நாடு என குறிப்பிட வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்போது ஏராளமான மக்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்து நாடு கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை கண்டித்து இந்து அமைப்பினர் சிலர் மஞ்சள் மற்றும் காவி நிற கொடிகளுடன் காத்மாண்டுவில் பாதுகாப்பு படையினருடன் மோதினர். இந்து அமைப்பினர் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்தனர். அப்போது தான் மோதல் வெடித்தது.
ஆத்திரத்தில் போராட்டக்காரர்கள் ஐ.நா.வுக்கு சொந்தமான வாகனம் உள்ளிட்ட அந்த வழியாக வந்த வாகனங்களை தாக்கினர்.












Click it and Unblock the Notifications