அமெரிக்காவில் தீவிரமடையும் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டங்கள்!
ரிச்மண்ட்(யு.எஸ்): அமெரிக்கா முழுவதும் ஜல்லிக்கட்டு விழிப்புணர்வு போரட்டங்கள்
தீவிரமடைந்துள்ளன. அமெரிக்க ஒருங்கிணைப்பாளர் கவிதா பாண்டியன் தமிழக எம்.பி.க்களுக்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரிச்மண்ட், நியூயார்க், பென்டன்வில் நகரங்களைத் தொடர்ந்து அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் தமிழர்கள் ஜல்லிக்கட்டு விழிப்புணர்வு போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அட்லாண்டா, வாஷிங்டன் டிசி, பால்டிமோர், நியூ ஜெர்ஸி, மினியாபோலிஸ், சியாட்டல் உள்ளிட்ட நகரங்களில் வெள்ளி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போராட்டங்கள் நடைபெற உள்ளன. அமெரிக்கத் தூதரகங்களிலும் கோரிக்கை மனுக்கள் கொடுக்க உள்ளார்கள்.
தமிழக எம்.பி.க்களே மனம் திறங்கள்....
இந் நிலையில் ஜல்லிக்கட்டு போராட்ட அமெரிக்க ஒருங்கிணைப்பாளர் கவிதா பாண்டியன், தமிழக எம்.பி. க்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"சங்க காலம் தொடர்ந்தே, ஏறு தழுவுதல் என்ற பெயரில் நடைபெற்று வரும் தமிழர்களின் பாரம்பரியமிக்க விளையாட்டை நடத்தித் தர தமிழக எம்.பி.க்கள் முன் வரவேண்டும்.

நாட்டு மாட்டு இன விருத்திக்காக வலிமையான காளைகளை உருவாக்கவும் பேணிக்காக்கவும் நம் முன்னோர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட வழிமுறைதான் ஏறு தழுவுதல் ஆகும் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பீட்டா அமைப்பு, அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான விலங்குளைக் கொன்று குவிக்கிறார்கள். அவர்கள் எப்படி விலங்குகளின் பாதுகாவலர்களாக இருக்க முடியும்? அவர்களுடைய உண்மையான நோக்கம் நமது மாட்டினத்தை அழிப்பதுதான்.
ஒரு எம்பி தனி நபர் மசோதா தாக்கல செய்தாலே, அதற்கு சட்ட வடிவம் கொடுக்க மத்திய அரசுக்கு கடமையுண்டு. அமெரிக்காவில் விலங்குகளை கொல்லும் பீட்டா அமைப்பின் உள் நோக்கத்தை புரிந்து கொண்டு தமிழக எம்.பி.கள் ஏறு தழுவுதல் நிகழ்ச்சியை இந்த ஆண்டு நடத்தித் தர உதவ வேண்டும்," என்று கூறியுள்ளார்.
உலகத் தமிழர்களே ஒரு நிமிடம் ஒதுக்குங்களேன்..
மேலும் அவர் உலகத் தமிழர்களுக்கும் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.' வெளி நாடுகளில் வசித்து வந்தாலும், நம்மில் பெரும்பாலானோர் இன்னும் இந்தியக் குடிமக்களாகவே இருக்கிறோம். இந்திய வாக்குரிமையும் பெற்றுள்ளோம்.
உங்களுடைய தொகுதி எம்.பி,களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேற்கண்ட கோரிக்கைகளை நீங்களும் வலியுறுத்துங்கள். நமது எம்.பி.களும் நம்மில் ஒருவர் என்பதில் நான் அசையாத நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன்.
அமெரிக்காவிலிருந்து எம்.பி, எம்.எல்.எக்களை தொடர்பு கொண்டு உள்ளூர் பிரச்சனைகளுக்கு, அவர்கள் உதவியுடன் தீர்வு கண்டிருக்கிறோம்.
நூற்றுக்கணக்கானோர் ஒரே கோரிக்கையை வலியுறுத்தும் போது, அவர்கள் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்வார்கள் என நம்புகிறேன்.
பொறுமையுடனும், நிதானத்துடனும் அமைதியாக உங்கள் கோரிக்கையை முன் வையுங்கள். மக்களின் குறைகளை கேட்கும் இடத்திலும், மக்களுக்காக திட்டங்களை செயல்படுத்தும் இடத்திலும் அவர்கள் இருப்பதால்தான் இந்த கோரிக்கையை அவர்களிடம் முன் வைக்கிறோம்.
யாருடைய மனதையும் புண்படுத்தாமல் நமது கோரிக்கையை வலியுறுத்துவது மட்டுமே நம் நோக்கம் என்பதை மனதில் நிறுத்திக்கொண்டு செயல்படுங்கள்.












Click it and Unblock the Notifications