ஒரே போடு! ஐரோப்பாவை திக்கி திணறடித்த புடின்.. ரஷ்யாவிடம் அடிபணிய வேண்டிய கட்டாயம்! என்ன நடந்தது?
மாஸ்கோ: ஐரோப்பாவிற்கும் நேட்டோவில் இருக்கும் பெரும்பாலான நாடுகளுக்கும் ரஷ்யா கடுமையான கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. ரஷ்யாவின் இந்த கட்டுப்பாடு உலக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் ரிசர்வ் வங்கி தொடங்கி பல்வேறு வங்கிகள் முடக்கப்பட்டு உள்ளன. அதேபோல் swift எனப்படும் சர்வதேச பரிவர்த்தனை மெசேஜிங் தளத்தில் இருந்தும் ரஷ்யா நீக்கப்பட்டு உள்ளது.
அதோடு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்ற முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது. மேலும் ரஷ்யாவிடம் இருந்து இயற்கை எரிவாயு வாங்குவதை குறைத்துக்கொள்வதாகவும் ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன.

என்ன நடந்தது?
ஐரோப்பா நாடுகள் ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைதான் பெரும்பாலும் நம்பி இருக்கிறது. அதேபோல் ஐரோப்பாவின் மொத்த இயற்கை எரிவாயுவில் 40 சதவிகித எரிவாயு ரஷ்யாவில் இருந்துதான் வருகிறது. என்னதான் போர் இருந்தாலும், பொருளாதார தடைகள் இருந்தாலும் ரஷ்யாவின் உதவி இன்றி ஐரோப்பா இருக்க முடியாது. அதனால்தான் போரில் நேரடியாக ஈடுபட ஐரோப்பா நாடுகள் மறுத்து வருகிறது.

ரஷ்யா
இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்ய அதிபர் புடின் ஏற்கனவே ரஷ்யாவிற்கு எதிராக இருக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுவிட்டார்.அதாவது தங்களிடம் நட்பாக இல்லாத நாடுகளின் பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார். ஐரோப்பாவில் உள்ள நாடுகள் அனைத்தும், பிரிட்டன், ஜப்பான், கனடா, நார்வே,அமெரிக்கா, சிங்கப்பூர், தென் கொரியா, சுவிட்சர்லாந்து, உக்ரைன் போன்ற நாடுகள் எல்லாம் நட்பு நாடுகள் இல்லை என்று ரஷ்ய அதிபர் புடின் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

என்ன சொன்னார்?
இந்த நிலையில்தான் இனிமேல் ரஷ்யாவிடம் நட்பாக இல்லாத நாடுகள் ரஷ்யாவுடன் பொருளாதார ரீதியான வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதை தங்கள் நாட்டு நாணயமான ரூபிளில் மட்டுமே செய்ய வேண்டும் என்று கூறி உள்ளது. அதன்படி புடின் தனது பேச்சில், ரஷ்யாவும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்க வேண்டும் என்றால், ரஷ்யாவிடம் நட்பாக இல்லாத எதிரி நாடுகள், ரூபிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு நாணயத்தை பயன்படுத்த கூடாது.

பொருளாதார தடை
உங்களின் பொருளாதார தடைகள், வங்கி முடக்க நடவடிக்கைகள் ஆகியவற்றால் எங்களின் பண மதிப்பு சரிந்துள்ளது. எங்கள் பணம் மீதான நம்பிக்கை, தேவை குறைந்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது . எனவே இனி ரூபிளில் மட்டுமே நாங்கள் வர்த்தகம் செய்வோம். நீங்கள் எங்கள் நாட்டிடம் பொருட்கள் வாங்குவீர்கள். ஐரோப்பா எங்கள் நாட்டிடம் இயற்கை எரிவாயு வாங்கும்.

மோசமான நடைமுறை
இப்படி எங்கள் நாட்டில் பொருட்களை வாங்கிவிட்டு, எங்கள் ரூபிளில் பணம் செலுத்தாமல் டாலர், யூரோவில் பணம் செலுத்துவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இதில் என்ன அர்த்தம் இருக்கிறது. எனவே இனிமேல் நாங்கள் எங்கள் வர்த்தகத்தை நட்பு இல்லாத நாடுகளுடன் ரூபிளில் மட்டுமே மேற்கொள்வோம் என்று புடின் காட்டமாக குறிப்பிட்டு இருக்கிறார். அதே சமயம் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட இயற்கை எரிவாயு அளவு, அதன் விலை மீது எந்த மாற்றத்தையும் செய்ய மாட்டோம் என்றும் ரஷ்யா உறுதி அளித்துள்ளது.

ஐரோப்பா திணறல்
ரஷ்யாவின் இந்த முடிவால் தற்போது ஐரோப்பா திக்கி தண்ணீர் குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பா இனி யூரோ அல்லது டாலர் மூலம் ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்ய முடியாது. ரஷ்யாவின் எண்ணெய் வேண்டும் என்றால் அவர்களின் பணத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது ரஷ்யாவின் பண மதிப்பை வரும் நாட்களில் உயர்த்தும். ரஷ்யா பொருளாதார ரீதியாக ஒரு வகையில் மீண்டும் எழுந்து வர உதவியாக இருக்கும்.

ரஷ்யா பணம்
தற்போது டாலருக்கு நிகரான ரஷ்யாவின் பண மதிப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. டாலருக்கு நிகரான ரஷ்யாவின் பண மதிப்பு 98.25 என்ற அளவில் உள்ளது. 130 என்ற மோசமான நிலையில் இருந்து ரூபிள் கொஞ்சம் முன்னேறி இருக்கிறது. இப்போது புடினின் இந்த அறிவிப்பால் டாலர் வர்த்தகம் சர்வதேச அளவில் சரியும். இது அமெரிக்காவிற்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications