"சபாஷ், சரியான தண்டனை.." பைக்கில் நின்று திமிராக சுற்றிய இளைஞர்.. சுக்கு நூறாக உடைத்த கத்தார் அரசு
தோஹா: பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் துளியும் கவலை இல்லாமல் பைக் ஸ்டண்ட் செய்த இளைஞருக்கு கத்தார் அரசு தக்க தண்டையை கொடுத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாலை விதிகளை பின்பற்றாமல் இருக்கும் நபர்களால் அவர்களுக்கு மட்டுமின்றி சாலையில் செல்வோருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

அதிலும் பைக்களில் அதிவேகமாகவும் ஆபத்தாகவும் பயணிப்போரால் தான் இங்கே பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இவர்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் ஸ்டண்ட் என்ற பெயரில் இவர்கள் விதிமீறல்களில் ஈடுபடுகிறார்கள்.
ஸ்டண்ட்: பைக் ஸ்டண்ட் என்பது கட்டுப்படுத்தப்பட்ட சாலைகளில், உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் வல்லுநர்கள் செய்வார்கள். ஆனால், இவர்கள் அப்படி எதையும் செய்யாமல் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளிலேயே அதிவேகமாக செல்வார்கள். இதனால் இவர்களுக்கு மட்டுமின்றி சாலையில் செல்லும் அனைவருக்கும் ஆபத்துதான்.
அப்படியொரு சம்பவத்தின் வீடியோ தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் டிரெண்டானது. அதாவது ரேஸ் டிராக்கில் இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை ஒன்றில் அந்த நபர் பைக் ஸ்டண்ட் செய்திருந்தார். பைக்கின் மீது ஏறி நின்று கொண்டு அந்த நபர் அதிவேகமாக செல்வது போல இருந்தது.
ஷாக் வீடியோ: அவர் பைக்கின் மீது நின்று கொண்டிருந்த நிலையில், அந்த நேரத்தில் யாராவது குறுக்கே வந்திருந்தால் நிச்சயம் அவரால் அதை கட்டுப்படுத்த முடிந்திருக்காது. அப்போது பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். நல்வாய்ப்பாக அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால், இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் டிரெண்டானது.
இதையடுத்து தனது உயிருக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அபாயகரமான முறையில் பைக்கை ஓட்டி ஸ்டண்ட் செய்ததற்காக அந்த பைக் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். பைக்கில் நின்று கொண்டு அதிவேகமாக சென்ற அந்த நபரின் வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆன நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரது பைக்கையும் கத்தார் போலீசார் கைப்பற்றினர்.
நடவடிக்கை: அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கத்தார் அரசு எச்சரித்திருந்தது. இதற்கிடையே அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த வீடியோவை கத்தார் அரசு வெளியிட்டுள்ளது. அதில் அவரது பைக் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சவுதி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கத்தார் சட்டப்படி இதுபோன்ற போக்குவரத்து மீறல்களில் ஈடுபடுபவோருக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.. மேலும், 10,000 கத்தார் ரியால் அதாவது இந்திய மதிப்பில் 1.40 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications