எலிசபெத் மகாராணியின் 90வது பிறந்தநாள்... தடபுடலாகக் கொண்டாட ஏற்பாடுகள் தீவிரம்
லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் 90வது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாட இப்போதே ஏற்பாடுகள் தொடங்கி விட்டன அந்த நாட்டில்..
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அடுத்தாண்டு ஜூன் மாதம் 12ம் தேதி தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். இதனை கோலாகலமாகக் கொண்டாட பக்கிங்காம் அரண்மனை தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. பக்கிஹ்காம் அரண்மனை அருகே மிகப் பெரிய மால் ஒன்றில் இந்த பிரமாண்ட கொண்டாட்டம் இடம் பெறுகிறது.
ராணியின் பிறந்தநாளன்று நடைபெற உள்ள விருந்து நிகழ்ச்சியில் சுமார் பத்தாயிரம் விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த விருந்து நிகழ்ச்சியில் ராணி, அவரது கணவர் பிலிப் மற்றும் பேரன்கள் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
விருந்தில் கலந்து கொள்ள உள்ள பத்தாயிரம் பேரில் பெரும்பான்மையான அனுமதிச் சீட்டுக்கள் ராணியின் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு என ஒதுக்கப் பட உள்ளது. மீதமுள்ள ஆயிரம் அனுமதிச்சீட்டுக்கள் பொதுமக்களுக்கு வழங்கப் பட இருக்கிறது. இதன் மூலம் ராணியின் பிறந்தநாள் விருந்தில் பொதுமக்களுக்கும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த நிகழ்ச்சிகளின் மூலம் கிடைக்கும் பணத்தை ராணியின் தொண்டு நிறுவனத் திட்டங்களுக்கு பயன் படுத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.